சென்னை: “அதிமுகவின் உள்கட்சி விவகாரங்களில் நாங்கள் தலையிடப் போவதில்லை. தேர்தல் தொடர்பாக நாங்கள் அனைவரும் கலந்துபோசி அதற்கான திட்டமிடுதலை உருவாக்குவோம்” என்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக கூறியுள்ளார்.
அதிமுக உள்கட்சி விவகாரம் மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிய சென்னை உயர் நீதிமன்றம், இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது. அதிமுக முன்னாள் எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத், வா.புகழேந்தி, கே.சி.பழனிசாமி, ராம்குமார் ஆதித்தன், எம்.ஜி.ராமச்சந்திரன். பி.காந்தி ஆகியோர் தரப்பில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக இந்த வழக்குகளைத் தொடர்ந்திருந்தனர். இதனால், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கும், எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கும் இடையிலான இந்தப் பனிப்போரில் யாருடைய கை ஓங்கப்போகிறது என்பதை அரசியல் விமர்சகர்கள் உற்றுநோக்கி வந்தனர்.