அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து இபிஎஸ் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மனு

3 hours ago 1

சென்னை: அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதிமுக விதிகளில் திருத்தம் செய்தது, தலைமை மாற்றம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக அதிமுகவைச் சேர்ந்த சூரியமூர்த்தி, புகழேந்தி, ராம்குமார் ஆதித்தன், கே.சி. பழனிச்சாமி, ரவீந்திரநாத் உள்ளிட்ட ஆறு பேர் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்திருந்தனர். இந்த புகார்கள் குறித்து விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்கக் கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகளை தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம், தேர்தல் ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தும், தேர்தல் ஆணையம் பதிலளிக்கவும் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுக்களுக்கு பதில் அளித்து தேர்தல் ஆணையம் சார்பில் தமிழக தலைமை அதிகாரி அர்ச்சனா பட்நாயக் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த பதில் மனுவில், அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக 6 புகார் மனுக்கள் அளிக்கப்பட்டிருந்ததால் அவற்றை ஒன்றாக பரிசீலித்து முடிவெடுக்கும் வகையில் பதில் மனுக்களை தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. புகழேந்தி மற்றும் ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகளில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் அவர்களின் புகார்களும் சேர்த்து விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது.

சுதந்திரமான அரசியல் சட்ட அமைப்பான தேர்தல் ஆணையத்திற்கு, நீதித்துறை அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை தொடர்ந்துள்ள அதிமுக, முழு பின்னணி விவரங்களை தெரிவிக்காமல், யூகத்தின் அடிப்படையில், முன்கூட்டியே தாக்கல் செய்துள்ளதால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. புகார்கள் குறித்து பதிலளிக்குமாறு உத்தரவு பிறப்பித்தன் மூலம் எந்த அதிகார வரம்பு மீறலிலும் தேர்தல் ஆணையம் ஈடுபடவில்லை என்பது தெளிவாகிறது. எனவே, எடப்பாடி பழனிச்சாமியின் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் சி.குமரப்பன் அடங்கிய அமர்வு, பிப்ரவரி 6ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.

The post அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து இபிஎஸ் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மனு appeared first on Dinakaran.

Read Entire Article