சென்னை: “கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையையும் விவேகானந்தர் பாறையையும் இணைக்கும் கண்ணாடிப் பாலம் திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. கரோனா காலக்கட்டத்தால் பணிகள் தடைப்பட்டது. ஆட்சி மாற்றத்துக்குப் பின் அந்த திட்டத்தை டெண்டர் விட்டு ஸ்டாலின் மாடல் அரசு செய்திருக்கிறது,” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை அதிமுக தலைமையகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (டிச.31) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “குமரியில் கண்ணாடி இழை பாலத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். அந்தத் திட்டம் அவர் கொண்டு வந்தது இல்லை. அதிமுக ஆட்சியில், நான் முதல்வராக இருந்தபோது கொண்டு வரப்பட்ட திட்டம். 2018-ல் மத்திய அமைச்சராக நிதின் கட்கரி இருந்தபோது, டெல்லியில் நடந்த கூட்டத்தில், இத்திட்டத்தை நான் தெரிவித்தேன். சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்லும் பகுதி, எனவே திருவள்ளுவர் சிலையையும், விவேகானந்தர் பாறையையும் இணைக்கப் பாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்.