அதனால்தான் அவர் ஒரு ஜாம்பவான் - ராஜஸ்தானுக்கு எதிரான வெற்றிக்குப்பின் அக்சர்

1 day ago 3

புதுடெல்லி,

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 32-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 188 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அபிஷேக் போரல் 49 ரன்கள் அடித்தார். ராஜஸ்தான் தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

அடுத்து 189 ரன் இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணியும் 4 விக்கெட்டுக்கு 188 ரன்கள் அடித்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது. இதையடுத்து வெற்றி தோல்வியை நிர்ணயிக்க ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது.

சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 5 பந்தில் இரு விக்கெட்டுகளையும் இழந்து 11 ரன் எடுத்தது. பின்னர் 12 ரன் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணி 4 பந்தில் 13 ரன் சேர்த்து வெற்றி பெற்றது.

டெல்லி அணியின் இந்த வெற்றியில் முக்கிய பங்கு வகித்த ஸ்டார்க் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

இந்நிலையில் இந்த வெற்றிக்குப்பின் டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் அளித்த பேட்டியில், "அனைத்தும் இந்த ஆட்டத்தில் சிறப்பாக நடந்து முடிந்தது. இந்த ஆட்டத்தை நாங்கள் தொடங்கிய விதத்தை வைத்து பார்க்கும்போது இன்னும் சிறப்பாக ஆடி இருக்க வேண்டும் என்று நினைத்தேன். இந்த போட்டியின் ஆரம்பத்திலேயே நாங்கள் அதிரடியாக விளையாட நினைத்தாலும் 12-வது ஓவருக்கு பிறகு தான் எங்களுக்கு உத்வேகம் கிடைத்தது.

அதன் பிறகு பேட்ஸ்மேன்கள் மிகச்சிறப்பாக ரன் குவித்தனர். அதேபோன்று பந்துவீச்சிலும் நாங்கள் மைதானத்தில் உள்ள தன்மையை சரியாக கணக்கில் வைத்து சிறப்பாக செயல்பட்டதாக நினைக்கிறோம். ஒரு கேப்டனாக இது போன்ற வெற்றி உண்மையிலேயே எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஏனெனில் இந்த வெற்றியின்போது நான் பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டிலுமே பங்களிப்பை வழங்கியுள்ளது நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு கேப்டனாக அணிக்கு நாம் நமது பங்களிப்பை வழங்கினால்தான் வீரர்களுக்கும் அது உத்வேகத்தை அளிக்கும்.

மிட்சல் ஸ்டார்க் வீசிய கடைசி 2 ஓவர்கள் அவர் எவ்வளவு பெரிய வீரர் என்பதை காட்டுகிறது. அவர் கிட்டத்தட்ட 12 யார்க்கர்களை வீசினார். அதனால்தான் அவர் ஒரு ஆஸ்திரேலிய ஜாம்பவான். அவர் ஒரு பந்தை மட்டுமே தவறவிட்டார் என்று நினைக்கிறேன். மைதானம் மாற்றப்பட்டது, ஆனால் அவர் அதை தொடர்ந்து செய்தார்" என்று கூறினார்.

Read Entire Article