
கேப்டவுன்,
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஹென்ரிச் கிளாசென் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜூன் 2-ம் தேதி திடீரென அறிவித்தார். 33-வயதான அவர் தென் ஆப்பிரிக்க அணிக்காக 60 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 4 சதங்கள் உள்பட 2,141 ரன்களும், 58 டி20 போட்டிகளில் விளையாடி ஆயிரம் ரன்களும் அடித்துள்ளார்.டெஸ்ட் போட்டிகளில் இருந்து கடந்த வருடத்துடன் ஓய்வு பெற்றார்.
இருப்பினும் வெள்ளைப்பந்து போட்டிகளில் (டி20 மற்றும் ஒருநாள்) உலகின் அபாயகரமான பேட்ஸ்மேன்களில் ஒருவராக கருதப்பட்ட அவர் திடீரென ஓய்வை அறிவித்தது அனைவரது மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சொந்த மண்ணில் 2027-ல் நடைபெற ஒருநாள் உலகக்கோப்பை வரை விளையாட தான் முடிவு செய்திருந்ததாக கிளாசென் தெரிவித்துள்ளார். இருப்பினும் தலைமை பயிற்சியாளரான ராப் வால்டர் வெளியேறியதும், மத்திய ஒப்பந்தங்களில் இருந்து தான் நீக்கப்பட்டதும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்டிலிருந்து விலகும் முடிவை எடுக்க கட்டாயப்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியது பின்வருமாறு:- " உண்மையாக நான் நீண்ட காலமாக எனது எந்த செயல்திறனைப் பற்றி கவலைப்படாமல், அணி வென்றால் என்ன? தோற்றால் என்ன? என்ற உணர்வை கொண்டிருந்தேன். அப்படிப்பட்ட உணர்வுடன் இருப்பதற்கு அணி தவறான இடமாக இருக்கும். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்பாக வால்டருடன் (தென் ஆப்பிரிக்க முன்னாள் தலைமை பயிற்சியாளர்) பேசினேன். அப்போது என்னால் நல்ல உணர்வுடன் விளையாட முடியவில்லை என்று அவரிடம் சொன்னேன்.
என்னால் மகிழ்ச்சியுடன் இருக்க முடியவில்லை என்று அவரிடம் சொன்னேன். அந்த வகையில் நன்றாக பேசிய நாங்கள் 2027 உலகக்கோப்பை வரை விளையாடுவது பற்றி திட்டமிட்டு வைத்திருந்தோம். ஆனால் அவர் பயிற்சியாளராக தன்னுடைய வேலையை முடித்ததும் தென் ஆப்பிரிக்கா அணியுடன் என்னுடைய ஒப்பந்தம் நன்றாக செல்லவில்லை. அது என்னுடைய ஓய்வு முடிவை அறிவிப்பதற்கான சூழ்நிலைகளை எளிதாக மாற்றியது. இப்போது நான் 6 அல்லது 7 மாதங்கள் வீட்டில் செலவிட முடியும். என் குடும்பத்திற்கு அது தேவை. எனக்கும் கொஞ்சம் ஓய்வு தேவை" என்று கூறினார்.
சர்வதேச கிரிக்கெட் இருந்து ஓய்வு பெற்றாலும் இவர் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் டி20 லீக் தொடர்களில் தொடர்ந்து விளையாட உள்ளார்.