
சென்னை,
தெகிடி, போர் தொழில் உள்பட பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகர் அசோக் செல்வன். மேலும் 'ஓ மை கடவுளே', 'நித்தம் ஒரு வானம்' உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.தெகிடி படத்தில் இடம் பெற்றிருந்த "பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்" பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் அசோக் செல்வன்.
தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அந்த வகையில் இவர் தமிழில் ரஜினி முருகன், பைரவா, சண்டக்கோழி 2, மாமன்னன் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். மேலும் சில கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளிலும் நடித்துள்ளார். தற்போது இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
கடந்தாண்டு இவர் நடித்திருந்த பேபி ஜான் திரைப்படம் வெளியானது. அடுத்தது கண்ணி வெடி, ரிவால்வர் ரீட்டா போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இதற்கிடையில் தனது நீண்ட நாள் நண்பர் ஆண்டனி தட்டிலை திருமணம் செய்து கொண்ட கீர்த்தி சுரேஷ் சினிமாவில் இருந்து விலகுகிறார் என சமூக வலைதளங்களில் பல தகவல்கள் உலா வருகிறது. இந்நிலையில் இவர், அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார் என சொல்லப்படுகிறது.
அதன்படி குட் நைட், லவ்வர் ஆகிய படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகும் புதிய படம் ஒன்றை தயாரிக்க போவதாகவும் அந்த படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கப் போகிறார் எனவும் நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் இந்த படத்தை யார் இயக்கப் போகிறார், யார் இசையமைக்கப் போகிறார் என்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.