
சென்னை,
கடந்த 2018-ம் ஆண்டு வெளியான திரைப்படம் '96'. இந்த படத்தை இயக்குனர் பிரேம் குமார் இயக்கினார். பள்ளிபருவகால காதல் கதையை அடிப்படையாக கொண்டு உருவான இந்த படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதன் பிறகு இப்படத்தை 2020ம் ஆண்டில் ‛ஜானு' என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்த பிரேம்குமார், அந்த படத்தில் சர்வானந்த், சமந்தாவை நடிக்க வைத்திருந்தார். அதன் பிறகு கார்த்தி - அரவிந்த்சாமி நடிப்பில் ‛மெய்யழகன்' என்ற படத்தை இயக்கினார்.
இதையடுத்து '96' படத்தின் இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் பிரேம் குமார் '96' இரண்டாம் பாகத்திற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்திருந்தார்.
'96' இரண்டாம் பாகத்திற்கான கதை என்பது ஜானுவை தேடி ராம் சிங்கப்பூர் செல்வதுதான் என்று கூறப்படுகிறது. பிரேம்குமார் இதை விஜய் சேதுபதியிடம் விவரித்தபோது அவர், இரண்டாம் பாகம் எடுப்பது குறித்து எந்த ஆர்வமும் காட்டவில்லையாம். எனவே பிரேம்குமார், விஜய் சேதுபதிக்கு பதிலாக ஹீரோவாக நடிக்க பிரதீப் ரங்கநாதனை அணுகியுள்ளதாக தகவல் வெளியானது..
'96' படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக ஹீரோவாக நடிக்க பிரதீப் ரங்கநாதனை அணுகியுள்ள தகவலை மறுத்து இயக்குனர் பிரேம் குமார் தனது இன்ஸ்டிராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் "இது வழக்கம் போல் ஒரு தவறான செய்தி. '96' படத்தில் நடித்த நடிகர்களை வைத்து மட்டும்தான் '96-2' படம் எடுக்க முடியும். நடிகர் திரு பிரதீப் ரங்கநாதன் அவர்களை நான் அணுகியது முற்றிலும் வேறு ஒரு கதைக்கு. அதற்கும் '96-2' படத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. நாளுக்கு நாள் பெருகி வரும் தீங்கு விளைவிக்கும் இந்த பொய் செய்திகளை கையாள்வது மிகவும் கடினமாக உள்ளது. இதன் மூலம் உண்மையை சொல்ல அறம் சார்ந்த அச்சு மற்றும் ஊடக நண்பர்களை மீண்டும் நாடுகிறேன்." என பதிவிட்டுள்ளார்.