
மதுரை,
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், ஆளுங்கட்சியான தி.மு.க. மதுரையில் நாளை கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை நடத்த இருக்கிறது. தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த பொதுக்குழு கூட்டத்தில், 6 ஆயிரத்து 500 பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்க இருக்கின்றனர்.
தேர்தலை முன்னிறுத்தி நடைபெறும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாக தெரிகிறது. தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரை சென்றார். மதுரையில் ரோடு ஷோ நடத்திய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், அதன் பின்னர் முன்னாள் மேயர் முத்துவின் வெண்கல சிலையை திறந்து வைத்தார்.
இந்நிலையில், மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள தனது சகோதரர் மு.க.அழகிரியை, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தற்போது சந்தித்தார். முதல்-அமைச்சராக பதவியேற்ற பின், முதல்முறையாக மு.க.அழகிரி இல்லத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.