55 வயது அத்தையுடன் கள்ளத்தொடர்பு: மாமாவை தீர்த்துக்கட்டிய வாலிபர்- திடுக் தகவல்கள்

1 week ago 7

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா கமசாகரா கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியா(வயது 62). இவர் தையல்காரர் ஆவார். இவரது மனைவி மீனாட்சி(55). கடந்த சில நாட்களுக்கு முன்பு சுப்பிரமணியா வீட்டில் இருந்து மாயமானார். அவர் எங்கு சென்றார்?, என்ன ஆனார்? என்று தெரியாமல் இருந்தது. இதனால் தனது கணவரை கண்டுபிடித்து தருமாறு கடூர் போலீசில் சுப்பிரமணியாவின் மனைவி மீனாட்சி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியாவை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று கிராமத்தையொட்டிய குப்பை கொட்டும் இடத்தில் ஒரு ஆண் பிணம் கிடந்தது. அந்த உடல் எரிக்கப்பட்ட நிலையில் கிடந்தது. அதாவது அந்த ஆண் பிணத்தின் மீது மரக்கட்டைகளை வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்திருந்தது தெரியவந்தது. யாரோ மர்ம நபர்கள் அந்த நபரை கொன்று உடலை குப்பை கொட்டும் இடத்தில் போட்டு எரித்திருந்தது தெரியவந்தது. இதுபற்றி அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரம் அம்தே, போலீசாருடன் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார். இதையடுத்து அந்த ஆண் பிணத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அது மாயமான சுப்பிரமணியா என்பது தெரியவந்தது. அதையடுத்து போலீசார் சுப்பிரமணியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் சுப்பிரமணியாவின் மனைவி மீனாட்சியையும் பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. அதாவது மீனாட்சிக்கும், அவரது வீட்டில் கட்டிட பணிகளை மேற்கொள்ள வந்த பிரதீப் ஆச்சாரி(32) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிரதீப் ஆச்சாரி, சுப்பிரமணியாவின் தங்கையின் மகன் ஆவார். தனக்கு மீனாட்சி அத்தை உறவுமுறை என்பதால் பிரதீப் ஆச்சாரி நெருங்கி பழகினார். ஒரு கட்டத்தில் இவர்களது பழக்கம் இருவருக்கும் இடையே நெருக்கத்தை ஏற்படுத்தி கள்ளத்தொடர்பாக மாறியது. அதையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.

இவர்களது கள்ளக்காதல் விவகாரம் சுப்பிரமணியாவுக்கு தெரியவந்தது. அவர் பிரதீப் ஆச்சாரியையும், மீனாட்சியையும் கண்டித்தார். இதையடுத்து சுப்பிரமணியாவை கொலை செய்துவிட்டால் நாம் சந்தோஷமாக வாழலாம் என்று பிரதீப் ஆச்சாரியும், மீனாட்சியும் முடிவு செய்தனர். அதன்பேரில் பிரதீப் ஆச்சாரி கூலிப்படையைச் சேர்ந்த சித்தேஷ்(35), விஷ்வாஷ்(19) ஆகியோருக்கு ரூ.30 ஆயிரம் கொடுத்து சுப்பிரமணியாவை காரில் தனியாக அழைத்து வந்து கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர். பின்னர் அவரது உடலை குப்பையில் போட்டு மரக்கட்டைகளை உடல் மீது அடுக்கி பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. அதையடுத்து போலீசார் பிரதீப் ஆச்சாரி, சித்தேஷ், விஷ்வாஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். காரையும் பறிமுதல் செய்தனர்.

Read Entire Article