
லண்டன்,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் இருந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி கடந்த 10-ம் தேதி லண்டன் லார்ட்சில் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் இரு அணிகளும் தலா 387 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆகின. பின்னர் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 62.1 ஓவர்களில் 192 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக ஜோ ரூட் 40 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டும், பும்ரா, முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதன் மூலம் இந்தியாவுக்கு 193 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 74.5 ஓவர்களில் 170 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தனி ஆளாக போராடிய ஜடேஜா 61 ரன்களுடன் இறுதிவரை களத்தில் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் ஆர்ச்சர், ஸ்டோக்ஸ் தலா 3 விக்கெட்டுகளும், பிரைடன் கார்ஸ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது போட்டி 23-ம் தேதி மான்செஸ்டரில் நடைபெற உள்ளது. இந்நிலையில், 4வது டெஸ்ட் போட்டியில் பும்ரா, ரிஷப் பண்ட் விளையாடுவார்களா என்ற கேள்விக்கு கேப்டன் கில் பதில் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, ரிஷப் பண்ட் காயம் குறித்து ஸ்கேன் பரிசோதனை செய்து கொண்டார். அதில் எந்த ஒரு அபாயமும் இல்லை என தெரிகிறது. இதனால் பண்ட் அடுத்த டெஸ்ட் போட்டியில் விளையாடுவதில் எந்த ஒரு குழப்பமும் இருக்காது என நம்புகிறேன்.
பும்ராவின் உடல் தகுதியை கருத்தில் கொண்டு அவர் இந்த டெஸ்ட் தொடரில் மூன்று போட்டியில் தான் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய பும்ரா இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஓய்வு எடுத்துக் கொண்டு மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு திரும்பினார். இந்த நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டிக்கு அவர் திரும்புவாரா இல்லையா என்பது குறித்து உங்களுக்கு விரைவில் தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.