
லண்டன்,
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து, 2வது டெஸ்ட்டில் இந்தியாவும் வெற்றிபெற்றுள்ளன. இதனால், 1-1 என்ற புள்ளி கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளன.இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரரான பென் டக்கெட் 23 ரன்னிலும், ஜாக் கிராலி 18 ரன்னிலும் அவுட் ஆகினர். அடுத்து வந்த ஆலி போப் 44 ரன்னிலும், ஹாரி புரூக் 11 ரன்னிலும் அவுட் ஆகினர். அதேவேளை, கேப்டன் பென் ஸ்டோக்சுடன் ஜோடி சேர்ந்த ஜோ ரூட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. ஜோ ரூட் 99 ரன்னிலும், ஸ்டோக்ஸ் 39 ரன்னிலும் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் நிதீஷ் குமார் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2ம் நாள் ஆட்டம் இன்று தொடங்குகிறது.
இந்த நிலையில், நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வித்தியாசமான அணுகுமுறையில் விளையாடியது என முன்னாள் வீரர் ஜோனதன் டிராட் தெரிவித்துள்ளார் . இது தொடர்பாக அவர் கூறியதாவது ,
முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுடன் ஒப்பிடும்போது இங்கிலாந்து வித்தியாசமான அணுகுமுறையில் விளையாடியது. ஆலி போப் வழக்கமான பாணியில் அதிரடியாக விளையாடுவார் என என்று நினைத்தேன், ஆனால் இது அந்த மாதிரியான ஆடுகளம் அல்ல என்பதை விரைவில் உணர்ந்தேன். ஆட்டத்தை சரிசெய்ததற்கு அவருக்கு நன்றி. ஜோ ரூட் நேற்றைய ஆட்டத்தில் சிறப்பாக விளையாடினார். என தெரிவித்தார் .