சண்டிகர்: தனது 23% பங்குகளை முறைகேடாக விற்க முயற்சித்ததாக கூறி பஞ்சாப் கிங்ஸ் அணியின் சக உரிமையாளர்களுக்கு எதிராக நடிகை பிரீத்தி ஜிந்தா வழக்கு தொடர்ந்தார். பிரபல பாலிவுட் நடிகையும், ஐபிஎல் அணியான பஞ்சாப் கிங்ஸின் இணை உரிமையாளருமான பிரீத்தி ஜிந்தா, அணியின் சக உரிமையாளர்களுக்கு எதிராக நேற்று அரியானா மாநிலம் சண்டிகர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பஞ்சாப் கிங்ஸ் அணியை நிர்வகிக்கும் கிங்ஸ் XI பஞ்சாப் நிறுவனத்தில் தனது 23% பங்குகளை முறைகேடாக விற்க முயற்சித்ததாகவும், இதற்கு தனது ஒப்புதல் பெறப்படவில்லை என்றும் பிரீத்தி ஜிந்தா குற்றம்சாட்டியுள்ளார்.
இணை உரிமையாளர்களான மோஹித் பர்மன், நெஸ் வாடியா மற்றும் கரண் பால் ஆகியோர் இந்த முடிவை எடுத்ததாகவும், இது அணியின் நிர்வாகத்தில் தனது உரிமைகளை மீறுவதாகவும் அவர் தனது மனுவில் கூறியுள்ளார். இந்த விவகாரம் ஐபிஎல் 2025 சீசனுக்கு முன்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரீத்தி ஜிந்தாவின் வழக்கறிஞர் கூறுகையில், ‘இந்த பங்கு விற்பனை முயற்சி ஒப்பந்த விதிமுறைகளை மீறுவதாகவும், பிரீத்தியின் அனுமதியின்றி எந்தவொரு முக்கிய முடிவும் எடுக்க முடியாது’ என்று வலியுறுத்தியுள்ளார். இந்த வழக்கு, பஞ்சாப் கிங்ஸ் அணியின் உரிமையாளர்களிடையே நீண்ட காலமாக இருந்து வந்த மோதல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
சமூக வலைதளங்களில் சிலர் பிரீத்தியின் முடிவை ஆதரிக்கவும், மற்றவர்கள் இது அணியின் ஒற்றுமையையும், ஐபிஎல் பஞ்சாப் கிங்ஸின் செயல்பாட்டையும் பாதிக்கலாம் என்று கவலை தெரிவித்துள்ளனர். நீதிமன்றம் இந்த வழக்கை விரைவில் விசாரிக்க உள்ளதால், பஞ்சாப் கிங்ஸின் எதிர்காலம் குறித்த பரபரப்பு தகவல்களும் வெளியாகி உள்ளன.
The post 23% பங்குகளை முறைகேடாக விற்க முயற்சி; பஞ்சாப் கிங்ஸ் அணி உரிமையாளர்களுக்கு எதிராக நடிகை பிரீத்தி ஜிந்தா வழக்கு: சண்டிகர் நீதிமன்றம் விசாரணை appeared first on Dinakaran.