சென்னை: புதிய கல்விக் கொள்கை தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால் தமிழ்நாடு அரசுக்கு கல்வி நிதி ஒதுக்கப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பதிலளித்துள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு இதுவரை துவங்கவில்லை எனக் கூறி, கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி இயக்கம் என்ற அமைப்பின் நிர்வாகி வே.ஈஸ்வரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
உடனடியாக மாணவர் சேர்க்கையை தொடங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் மனுவில் கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அடங்கி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதி குறி்த்த விவரங்களை சமர்ப்பிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்திருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது; மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன்; புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திடவில்லை. மத்திய அரசுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால் தமிழக அரசுக்கு கல்வி நிதி ஒதுக்கப்படவில்லை என விளக்கம் அளித்தார். அப்போது, தமிழக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், “ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் நிதி தர மாட்டோம் என்பது மத்திய அரசு பெரியண்ணன் மனப்பான்மையைக் காட்டுகிறது என வாதிட்டார்.
இதையடுத்து, 25 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக மே 28-ம் தேதி நடக்கவுள்ள கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த விவரங்களை தெரிவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
The post புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழ்நாடு அரசுக்கு கல்வி நிதி ஒதுக்கவில்லை: ஐகோர்ட் ஒன்றிய அரசு பதில் appeared first on Dinakaran.