
வேலூர்,
வேலூர் கோட்டை மைதானத்தில் 'இலக்கு 2026' என்ற தலைப்பில் இளைஞர்கள், இளம்பெண்கள் லட்சிய பாசறை மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசியதாவது;
"சென்னை கோட்டைக்கு செல்வதற்காகவே வேலூர் கோட்டையில் திரண்டுள்ளோம். கோட்டையில் இருப்பவர்களை வீட்டுக்கு அனுப்பும் கூட்டம்தான் இந்த மாநாடு. ஒரு கட்சி வலுவாக இருக்க இளைஞர்கள் அதிகமாக இருக்க வேண்டும். இளைஞர்களை அதிகம் கொண்டிருக்கும் கட்சி அதிமுக.
அதிமுக யாரை நம்பியும் இல்லை. மக்களை நம்பியே உள்ளது. குழந்தைகள் தன்னை 'அப்பா அப்பா' என பாசத்தோடு அழைப்பதாக முதல்-அமைச்சர் கூறி வருகிறார். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகள் 'அப்பா' என கதறுவது முதல்-அமைச்சருக்கு கேட்கவில்லையா?
தமிழகத்தை பொறுத்தவரை இருமொழிக்கொள்கைதான் கடைபிடிக்கப்படும். இதில் எவ்வித மாற்றமும் கிடையாது. தமிழகத்துக்கு வர வேண்டிய நிதிய வழங்க மத்திய அரசு மறுக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கும் ஆட்சியாளர்களை பார்க்காதீர்கள். மக்களை பார்த்து நிதி வழங்குங்கள்.
திமுகவுக்கு கொள்கையும் கிடையாது, கூட்டணியும் கிடையாது. பதவிக்கும், அதிகாரத்துக்கும் வர அடிக்கடி நிறம் மாறும் கட்சி திமுக. கூட்டணி வேறு, கொள்கை வேறு. 2026 தேர்தலில் அதிமுக தலைமையில் வலுவான வெற்றிக்கூட்டணி அமையும். 2026 தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி வாகை சூடும்."
இவ்வாறு அவர் பேசினார்.