
மும்பை,
அக்ஷய் குமார் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகி வரும் அடுத்த திகில்-நகைச்சுவை படமான 'பூத் பங்களா' அறிவிக்கப்பட்டதிலிருந்தே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டதாக நடிகர் அக்சய் குமார் வீடியோ பகிர்ந்து தெரிவித்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அக்சய் குமார். இவர், தமிழில் ரஜினியுடன் 2.0 திரைப்படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் இவரின் நடிப்பில் ஓஎம்ஜி -2, 'சர்பிரா', 'கேல் கேல் மெய்ன்' மற்றும் சிங்கம் அகெய்ன் ஆகிய திரைப்படங்கள் வெளியாகின.
தற்போது பாலிவுட் இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கும் 'பூத் பங்களா' படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இதன் மூலம் அக்சய் குமார் 16 வருடங்களுக்கு பிறகு பிரியதர்ஷனுடன் இணைந்துள்ளார். கடைசியாக இருவரும் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான பூல் பூலையா படத்தில் ஒன்றாக பணியாற்றினர்.
மேலும், இப்படத்தில் வாமிகா கபி, தபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 2-ம் தேதி வெளியாக உள்ளது.