2024 மக்களவை தேர்தலுக்கு பிறகு தேஜ கூட்டணி தலைவராக சந்திரபாபு நாயுடு விரும்பினார்: தேவ கவுடா புதுதகவல், பாஜ மறுப்பு

3 months ago 7

புதுடெல்லி: தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர் பொறுப்பை ஏற்க சந்திரபாபு நாயுடு விரும்பினார். அதை மோடி மறுத்து விட்டார் என்ற தேவகவுடாவின் கூற்றை பாஜ மறுத்துள்ளது. மாநிலங்களவையில் நேற்று குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான உரையில் முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதா தள தலைலருமான, மாநிலங்களவை உறுப்பினர் எச்.டி.தேவ கவுடா பேசினார்.

அப்போது, “நாட்டில் ஏழைகள், நடுத்தர மக்கள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு அதிக முன்னுரிமை தரப்படுவதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது. புறக்கணிக்கப்பட்ட பிரிவினர் இந்த உயரிய முன்னுரிமையை அடைவதற்கும், அதை செயல்படுத்துவதற்கும் ஐந்தாண்டுகள் இயங்க கூடிய நிலையான அரசாங்கம் அமைந்திருப்பது அவசியம். தற்போது எங்களை போன்ற மாநில கட்சிகளின் ஆதரவுடன் இந்த அரசாங்கம் முழுமையாக இயங்கும். அதை சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை.

பிரதமர் மோடியின் ஆதரவை பெற வேண்டும் என்ற அவசியமும் எனக்கு இல்லை. 22 ஆண்டுகாலம் முதல்வராகவும், பிரதமராகவும் பொறுப்பு வகித்த அனுபவம் உடைய மோடி அரசை எந்த பிரச்னையுமின்றி நடத்த கூடியவர்” என புகழ்ந்துரைத்தார். மேலும், “பாஜ கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு 2024 மக்களவை தேர்தலுக்கு பிறகு தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராகவோ அல்லது துணை தலைவராகவோ ஆக வேண்டுமென விரும்பினார்.

ஆனால் சந்திரபாபு நாயுடுவின் விருப்பத்தை மோடி ஏற்கவில்லை. ஏனெனில் மோடிக்கு நிர்வாகத்தை எப்படி நடத்துவது என்று தெரியும்” என்று தேவகவுடா தெரிவித்தார். தேவகவுடாவின் பேச்சுக்கு பாஜ மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநிலங்களவையில் பேசிய பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, “பாஜவின் தலைவர் என்ற முறையில் அப்படி எந்தவொரு விவாதமும் நடக்கவில்லை என்பதை தௌிவுப்படுத்த விரும்புகிறேன். மோடியின் தலைமையை கூட்டணி கட்சியினர் அனைவரும் ஏற்று கொண்டனர்” என விளக்கம் அளித்தார்.

The post 2024 மக்களவை தேர்தலுக்கு பிறகு தேஜ கூட்டணி தலைவராக சந்திரபாபு நாயுடு விரும்பினார்: தேவ கவுடா புதுதகவல், பாஜ மறுப்பு appeared first on Dinakaran.

Read Entire Article