பண்ருட்டி, பிப். 23: தென்பெண்ணை ஆற்றங்கரை பகுதியில் 2000 ஆண்டு பழமையான சுடுமண் குடுவை மற்றும் ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே எனதிரிமங்கலம் தென்பெண்ணை ஆற்றில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல், விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை முதுகலை 2ம் ஆண்டு மாணவர் ராகுல் மற்றும் வரலாற்று ஆர்வலர் பிரதாப் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று களஆய்வு மேற்கொண்டனர். அப்போது குறியீடு பொறித்த சிவப்புநிற சுடுமண் குடுவை மற்றும் குறியீடு உள்ள கருப்பு, சிவப்பு நிறமுள்ள ஓடுகள் போன்றவற்றை கண்டெடுத்தனர்.
எனதிரிமங்கலம் தென்பெண்ணை ஆற்றில் கண்டெடுத்த குறியீடுள்ள குடுவை மற்றும் ஓடுகள், தொல்லியல் துறையினரால் ஈரோடு அருகே உள்ள கொடுமணல் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட குறியீடுகளோடு ஒத்துள்ளதாக காண முடிகிறது. அதாவது சுமார் 2000 ஆண்டுகள் பழமையானதாக இந்த குறியீடை கணிக்க முடிகிறது என்று தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் தெரிவித்தார். மேலும் இதன் மூலம் கள ஆய்வில் ஆற்றங்கரை பகுதியில் பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான தொல்லியல் தடயங்கள் தொடர்ந்து கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தி வருகிறோம், என்றார்.
The post 2000 ஆண்டுகள் பழமையான சுடுமண் குடுவை, ஓடுகள் கண்டெடுப்பு appeared first on Dinakaran.