![](https://media.dailythanthi.com/h-upload/2025/01/25/35802524-paarl.webp)
பார்ல்,
தென் ஆப்பிரிக்க உள்ளூர் டி20 தொடரான எஸ்.ஏ. லீக்கில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் - பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பார்ல் ராயல்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 78 ரன்கள் அடித்தார்.
பின்னர் 141 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 129 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதன் மூலம் 11 ரன்கள் வித்தியாசத்தில் பார்ல் ராயல்ஸ் வெற்றி பெற்றது. அத்துடன் பிளே ஆப் சுற்றுக்கும் தகுதி பெற்றுள்ளது. பிரிட்டோரியா தரப்பில் வில் ஜாக்ஸ் 56 ரன்கள் அடித்தார். பார்ல் தரப்பில் ரூட், பிஜோர்ன் போர்டுயின் மற்றும் முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இந்த ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் அணி தரப்பில் 20 ஓவர்களையும் சுழற்பந்து வீச்சாளர்களே வீசினர். இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 20 ஓவர்களையும் சுழற்பந்தாக வீசிய முதல் அணி என்ற அரிய சாதனையை பார்ல் ராயல்ஸ் படைத்துள்ளது.