* டாடா சோலார் ஆலை, தாமிரபரணி – நம்பியாறு – கருமேனியாறு நதி நீர் இணைப்பு திட்டத்தை துவக்கி வைக்கிறார்
நெல்லை: நெல்லை மாவட்டத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (6ம் தேதி) நெல்லை வருகிறார். அங்கு அரசு திட்டப்பணிகளை களஆய்வு செய்யும் முதல்வர், கங்கை கொண்டானில் 3 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் டாடா சோலார் தொழிற்சாலையை துவக்கி வைக்கிறார். நாளை 5 கிலோ மீட்டர் தூரம் ரோடு ஷோ நடத்துகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்டவாரியாக அரசு திட்டப்பணிகளை களஆய்வு செய்து, முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அந்த வகையில் 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று (6ம் தேதி) காலை நெல்லை மாவட்டம் செல்கிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பின்னர் கார் மூலம் காலை 11 மணிக்கு நெல்லை செல்கிறார்.
அங்கு அவருக்கு நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என். நேரு தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. அங்கிருந்து கங்கைகொண்டான் சிப்காட் செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நண்பகல் 12.15 மணிக்கு 3 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ₹4,400 கோடியில் அமைக்கப்பட்டுள்ள டாடா சோலார் பேனல் உற்பத்தி தொழிற்சாலையை துவக்கி வைக்கிறார். மேலும் சிப்காட்டில் அமைக்கப்பட்டுள்ள உணவு பூங்காவையும் முதல்வர் திறந்து வைக்கிறார். அங்கு புதிதாக அமைக்கப்படும் விக்ரம் சோலார் பேனல் பசுமை தொழிற்சாலைக்கும் அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மதியம் 1.30 மணிக்கு நெல்லை வண்ணார்பேட்டை விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுக்கிறார். அங்கிருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாளையங்கோட்டையில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள காந்தி மார்க்கெட் வளாகத்தை திறந்து வைக்கிறார்.
இதைத்தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு திமுக முக்கிய நிர்வாகிகளுடன் பாளை. நேருஜி கலையரங்கில் ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து பாளை. நூற்றாண்டு மண்டபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் 1000க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைகின்றனர். இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பாளை. வண்ணார்பேட்டை விருந்தினர் மாளிகைக்கு செல்லும் முதல்வர் இரவில் அங்கு தங்குகிறார். நாளை (7ம் தேதி) காலை 8 மணிக்கு வண்ணார்பேட்டை விருந்தினர் மாளிகையில் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுடன் உரையாடுகிறார். தொடர்ந்து வண்ணார்பேட்டை முதல் பாளை. அரசு மருத்துவக் கல்லூரி மைதானம் வரை 5 கிமீ தூரம் ரோடு ஷோ செல்கிறார். பின்னர், பாளை. அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடக்கும் அரசு விழாவில் கலந்து கொள்ளும் முதல்வர் நெல்லை மாவட்டத்திற்கு ₹9 ஆயிரத்து 368 கோடி மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, 75 ஆயிரத்து 151 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.
அரசு விழாவில் நாட்டிற்கே முன் உதாரணமாக கலைஞர் ஆட்சியில் துவக்கி வைக்கப்பட்டு ரூ.1,061 கோடியில் பணிகள் முடிக்கப்பட்டுள்ள தாமிரபரணி – நம்பியாறு – கருமேனியாறு நதி நீர் இணைப்பு வெள்ள நீர் கால்வாய் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். பின்னர் காலை 11 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையம் செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நெல்லை வருவதால் அவரை வரவேற்க நெல்லை விழாக்கோலம் பூண்டுள்ளது.
The post 2 நாள் களஆய்வுக்கு இன்று நெல்லை செல்கிறார்; முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை 5 கிலோ மீட்டர் ‘ரோடு ஷோ’ appeared first on Dinakaran.