சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (30.6.2025) தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 59 சித்தா உதவி மருத்துவ அலுவலர்கள், 2 ஆயுர்வேதா உதவி மருத்துவ அலுவலர்கள், 1 யுனானி உதவி மருத்துவ அலுவலர், 53 யோகா மற்றும் இயற்கை மருத்துவ உதவி மருத்துவ அலுவலர்கள்/விரிவுரையாளர்கள் (நிலை-II) மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக 57 சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-3 ஆகிய பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மொத்தம் 172 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் செயல்படும் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகம், இந்திய மருத்துவ முறையை முக்கிய அங்கமாகக் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு மருத்துவ நிலையங்களில் இந்திய மருத்துவ முறைக்கான பிரிவுகள் / மருத்துவமனைகளை திறப்பதன் மூலம் முழுமையான சுகாதார பராமரிப்பு மற்றும் பாரம்பரிய அமைப்பின் நன்மைகளை பொதுமக்களுக்கு அளித்து வருகிறது. நாட்டிலேயே சித்தா, ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி மற்றும் ஓமியோபதி மருத்துவ பிரிவுகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்பட்ட ஒரே மாநிலம் தமிழ்நாடு என்பது குறிப்பிடத்தக்கது. இம்மருத்துவ பிரிவுகள் நோய்த்தடுப்பு, ஊக்குவிப்பு, குணப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் புத்துணர்ச்சி தேவைகளை உள்ளடக்கிய பரந்த அளவிலான சிகிச்சைகளை வழங்குகிறது.
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகத்தின் பணி தொய்வின்றி நடைபெற காலிப் பணியிடங்களை நிரப்பிடும் வகையில், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 59 சித்தா உதவி மருத்துவ அலுவலர்கள், 2 ஆயுர்வேதா உதவி மருத்துவ அலுவலர்கள், 1 யுனானி உதவி மருத்துவ அலுவலர் மற்றும் 53 யோகா மற்றும் இயற்கை மருத்துவ உதவி மருத்துவ அலுவலர்கள்/விரிவுரையாளர்கள் (நிலை-II), என மொத்தம் 115 உதவி மருத்துவ அலுவர்களுக்கு பணிநியமன ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று வழங்கினார்.
மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 57 சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-3 பணியிடத்திற்கு தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு 12.05.2025 அன்று கலந்தாய்வு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் பணிநியமனம் செய்யப்பட்ட 57 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள் வரை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 4634 உதவி மருத்துவர்கள், 27 மாற்றுத்திறனாளி செவிலியர்கள், 2772 இதர மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் உள்ளடக்கிய 7433 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2024-2025-ஆம் ஆண்டில் 7 பதவிகளுக்கு மொத்தம் 4080 பணியாளர்களும், 2025-ஆம் ஆண்டிற்கான மீதமுள்ள 20 பணி பிரிவுகளில் 9722 பணியிடங்களுக்கான தேர்வுகள் 2025 டிசம்பர் மாதத்திற்குள் முடித்திட பணிகள் நடைப்பெற்று வருகின்றன.
மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 555 உதவியாளர் பணியிடங்கள், 584 இளநிலை உதவியாளர் பணியிடங்கள், 187 தட்டச்சர் பணியிடங்கள் மற்றும் 255 சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-3 பணியிடங்கள் நிரப்பப்பட்டு, பணிபுரிந்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் கருணை அடிப்படையில் 74 இளநிலை உதவியாளர் பணியிடங்களும், 11 தட்டச்சர் பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளது. செவிலியர்களின் நலன் கருதி ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய 3613 செவிலியர்களை காலமுறை ஊதிய அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது.
The post 115 உதவி மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!! appeared first on Dinakaran.