நியுயார்க்: ஃபிபா கிளப் உலகக் கோப்பை கால்பந்து நாக்அவுட் சுற்றுப் போட்டியில் நேற்று, பேயர்ன் அணி அபார வெற்றி பெற்று காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. ஃபிபா கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள், அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகின்றன. இப்போட்டிகளில், உலகின் புகழ்பெற்ற 32 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மோதி வந்தன. போட்டிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், தற்போது நாக்அவுட் சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் நேற்று நடந்த நாக்அவுட் சுற்றுப் போட்டியில் ஜெர்மனை சேர்ந்த முன்னணி கால்பந்து அணியான, எப்சி பேயர்ன் அணியும், பிரேசிலை சேர்ந்த பிளமென்கோ அணியும் மோதின. சூறாவளியாய் சுழன்று ஆடிய பேயர்ன் அணி வீரர்கள் எரிக் புல்கர் 6வது நிமிடத்திலும், ஹேரி கேன் 9, 73வது நிமிடங்களிலும், லியோன் கோரெட்ஸ்கா 41வது நிமிடத்திலும் 4 கோல் அடித்து அமர்க்களப்படுத்தினர். பிளமென்கோ அணியின் கெர்சன் 33, ஜோகின்ஹோ 55வது நிமிடத்திலும் 2 கோல்கள் மட்டுமே அடித்தனர். அதனால், 4-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியை பதிவு செய்த பேயர்ன் அணி, காலிறுதிக்கு முன்னேறியது.
The post கிளப் உலகக் கோப்பை கால்பந்து: சூறாவளியாய் சுழன்ற பேயர்ன் காலிறுதிக்கு முன்னேற்றம்; 4 கோல் வாங்கி வீழ்ந்த பிளமெங்கோ appeared first on Dinakaran.