பெங்களூரு: ஐபிஎல் 18வது தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் (27). இவர் மீது உ.பி மாநிலம் காஜியாபாத்தை சேர்ந்த ஒரு பெண் பாலியல் புகார் அளித்துள்ளார். அவரது புகாரில் கூறியிருப்பதாவது: யாஷ் தயாள் என்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து என்னிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டார். ஊட்டிக்கு அழைத்து சென்று பாலியல் கொடுமைகளில் ஈடுபட்டார். நான்கரை ஆண்டுகளாக நாங்கள் தொடர்பில் இருந்துள்ளோம். யாஷ் தயாள் வீட்டில் நான் 15 நாட்கள் தங்கி இருந்தேன். அவருடைய குடும்பத்தினருடனும் நெருங்கி பழகி வந்தேன்.
ஆனால், என்னை திருமணம் செய்யாமல் அவர் ஏமாற்றி விட்டார். அவருக்கு மேலும் பல பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்ததால் நான் அதிர்ச்சி அடைந்தேன். எனக்கு பணம் தந்து பிரச்னையை திசை திருப்ப அவர் முயன்றார். தனக்கு உள்ள செல்வாக்கையும், புகழையும் பயன்படுத்தி என்னை மிரட்டி வருகிறார். ஆனால், எனக்கு சட்டத்தின் மீது முழு நம்பிக்கை உள்ளது. இவ்வாறு புகாரில் அந்த பெண் கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக யாஷ் தயாளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். புகழ் பெற்ற கிரிக்கெட் வீரருக்கு எதிராக பாலியல் புகார் கூறப்பட்டுள்ள விவகாரம், கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post ஆர்சிபி வீரர் மீது பாலியல் புகார்: ஊட்டிக்கு கூட்டி சென்று லூட்டியடித்த யாஷ் தயாள்; கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.