சென்னை: 10, 12ம் வகுப்பு பொது தேர்வுகளில் 100% தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளிகள் விவரங்களை தேர்வு முடிவுகள் வெளிவந்த 10 நாட்களுக்குள் சமர்பிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன், அனைத்துமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் 3,088 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 3,174 மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த பல்வேறு சிறப்பு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே 10, 12ம் வகுப்பு பொது தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளிகள் மற்றும் அதன் ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் 25ம் தேதி அறிவிப்பு வெளியானது. அதை செயல்படுத்தும் விதமாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதும் 100 சதவீத தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளிகள் மற்றும் அதன் ஆசிரியர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும். அவற்றை தொகுத்து அறிக்கையை 10 நாட்களுக்குள் இயக்குநரகத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும். இதில் காலதாமதம் ஏற்படாதவாறு விரைந்து செயல்படுமாறு முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post 100 சதவீதம் தேர்ச்சி பெறும் அரசுப்பள்ளி விவரங்களை சமர்ப்பிக்க உத்தரவு appeared first on Dinakaran.