
மதுரை,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விஷால் உள்ளார். இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டப்பட்ட பின்னரே நான் திருமணம் செய்துகொள்வேன் என்று விஷால் ஏற்கனவே அறிவித்தார். தற்போது நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகர் விஷால் இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமிதரிசனம் செய்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், "மாவட்ட செயலாளர் திருமணத்திற்காக மதுரை வந்தேன். மதுரைக்கு வந்து மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போகாமல் எப்படி ஊருக்கு போக முடியும்? எங்க அம்மா வீட்டுக்குள் சேர்க்க மாட்டாங்க. எங்கம்மா புடவை கொடுத்தாங்க அம்மனுக்கு கொடுத்து சாமி தரிசனம் செய்தேன். 2006ல் திமிரு பட சூட்டிங் போது வந்தேன். 19 வருஷம் கழிச்சு இப்ப வந்திருக்கிறேன். மனசார வேண்டிக் கொண்டேன்.
நடிகர் சங்க கட்டிடம் தாமதத்திற்கு காரணம் நான் இல்லை. ஆறு மாதத்தில் முடிக்க வேண்டியதை நடிகர் சங்கம் தேர்தல் வைத்து எண்ணிக்கை என்ற பேரில் நீதிமன்றம் சென்றதால் 3 வருடம் தாமதம் ஆகிவிட்டது. இன்னும் நான்கு மாதத்தில் கட்டிடம் பெரிசாக வந்துவிடும். மதுரை மக்கள் 2 விஷயத்துல மாறவே மாட்டாங்க. ஒன்று பாசம், மற்றொன்று உணவு. இரண்டு விஷயத்திலும் மாறவே மாட்டார்கள். நூறு வருஷம் கழிச்சு வந்தாலும் அதே பாசம், சிரிப்பு இருக்கும்" என்றார்.