
சென்னை,
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம், 2025 முதல் 2027 வரை தயாராகி திரையரங்குகளில் வெளியாகவுள்ள, ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும், திரைப்படங்களின் வரிசையை, சமூக வலைதள பக்கங்களில் இன்று பிரம்மாண்டமாக வெளியிட்டது.
வெற்றிமாறன், மாரி செல்வராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், சுந்தர் சி, பிரேம் குமார், அருண்ராஜா காமராஜ், ஜூட் ஆண்டனி ஜோசப், விக்னேஷ் ராஜா (போர்த் தொழில்), செல்ல அய்யாவு (கட்டா குஸ்தி), கணேஷ் கே பாபு (கராத்தே பாபு) ஆகியோரை வைத்து, வெவ்வேறு ஜானர்களில் படம் இயக்கப்படவுள்ளன. இந்தப் படங்களில் தனுஷ், ரவி மோகன், நயன்தாரா மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.
இது தொடர்பாக வேல்ஸ் நிறுவனத்தின் ஐசரி கணேஷ், "இந்த திரைப்பட வரிசை எங்களின் அடுத்த அத்தியாயத்தை குறிக்கிறது. வலிமையான மற்றும் ஆழமான கதைகள் கொண்ட மிகப்பெரிய வரிசையாகும். இந்திய சினிமாவின் மிகச்சிறந்த படைப்பாளிகளுடன் கைகோர்க்கும் வாய்ப்பு கிடைத்ததில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இப்படங்கள் பல தளங்களிலும், பல மொழிகளிலும் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
கோமாளி, வெந்து தணிந்தது காடு, எல் கே ஜி , மற்றும் மூக்குத்தி அம்மன் போன்ற வெற்றிப் படங்களை வழங்கிய வேல்ஸ் நிறுவனம், தற்போது புரோடக்சன், டிஸ்டிரிபுயூசன் என முழுமையான பணிகளை மேற்கொள்ளும் ஸ்டுடியோவாக வளர்ந்து வருகிறது. வேல்ஸ் நிறுவனம் தற்போதைய வளர்ச்சிக்காக, டிஜிட்டலில் கதைகளுக்கான தனிச்சிறப்பு டெவலப்மென்ட் அணியையும் உருவாக்கி வருகிறது. வேல்ஸ் நிறுவனம் தற்போது இந்தியாவின் மிகப்பெரிய இண்டோர் ஸ்டுடியோவை சென்னையில் கட்டி வருகிறது மற்றும் மேலும் பல ஸ்டுடியோக்களை கைப்பற்றும் பேச்சுவார்த்தையில் உள்ளது.