
புதுடெல்லி,
ரெயில் கட்டுப்பாட்டு துறை, இந்திய ரெயில்வேயின் மூளை அல்லது நரம்பு மையமாக கருதப்படுகிறது. அத்துறையில் கடந்த 2017-ம் ஆண்டு வரை ரெயில்வே தேர்வு வாரியம் நடத்திய ரெயில்வே போக்குவரத்து பழகுனர் தேர்வு மூலம் ஊழியர்கள் நேரடி தேர்வுமுறை மூலம் நியமிக்கப்பட்டு வந்தனர்.
2017-ம் ஆண்டில் இருந்து இந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. கார்டுகள், நிலைய மேலாளர்கள், குமாஸ்தாக்கள் ஆகியோரில் இருந்து ரெயில் கட்டுப்பாட்டு துறைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், கட்டுப்பாட்டு துறையில் பணப்பலன்கள் சமமாகவோ, அதிகமாகவோ இல்லாததால், அத்துறையில் சேர ரெயில்வே ஊழியர்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால், திறமை இல்லாத ஊழியர்களே அதில் நியமிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், ரெயில்வே அமைச்சகம் புதிய சீர்திருத்தங்களை அறிவித்துள்ளது. அதன்படி, 8 ஆண்டுகளுக்கு பிறகு, ரெயில் கட்டுப்பாட்டு துறையில் ஊழியர்கள் நேரடி தேர்வுமுறை மூலம் நியமிக்கப்பட உள்ளனர். அத்துறையில் 60 சதவீத பணியிடங்களை இம்முறையில் நிரப்ப ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
ரெயில்வே தேர்வு வாரியம் நேரடியாக தேர்வு செய்யும் பட்டதாரி அளவிலான விண்ணப்பதாரர்கள், அந்த பணியிடங்களில் நியமிக்கப்படுவார்கள். இந்த தேர்வை எப்படி நடத்துவது என்பது பற்றி உரிய அதிகாரிகள் முடிவு செய்வார்கள் என்று ரெயில்வே செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். இதன்மூலம், கட்டுப்பாட்டு துறைக்கு திறமையான ஊழியர்கள் கிடைப்பார்கள் என்று அவர் கூறினார்.