
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த தாம்பரம் மாநகர போலீஸ் சார்பில் கிழக்கு கடற்கரை சாலையில் நாளை(சனிக்கிழமை) காலை 7 மணி முதல் 10 மணி வரை ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட உள்ளது. இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் அக்கரை சந்திப்பிலிருந்து மாமல்லபுரம் நோக்கி வாகனங்கள் செல்ல முழுவதும் தடுக்க வேண்டியுள்ளது. இதனால் வாகனங்கள் மாற்று வழியில் பழைய மாமல்லபுரம் சாலை வழியாக செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதன்படி அக்கரையிலிருந்து கிழக்கு கடற்கரை சாலையில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் அக்கரை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி கே.கே.சாலை வழியாக சென்று பழைய மாமல்லபுரம் சாலையை அடைந்து இடதுபுறம் திரும்பி கேளம்பாக்கம், கோவளம் வழியை பயன்படுத்தி செல்ல வேண்டும். கோவளத்திலிருந்து கிழக்கு கடற்கரை சாலையில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் கோவளம் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி கேளம்பாக்கம் வழியாக சென்று பழைய மாமல்லபுரம் சாலையை அடைந்து சோழிங்கநல்லூர் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி அக்கரை சந்திப்பை அடைந்து இடதுபுறம் திரும்பி திருவான்மியூர் செல்ல வேண்டும்.
இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு தரும்படி தாம்பரம் மாநகர போலீஸ் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேற்கண்ட தகவல் தாம்பரம் மாநகர போலீசார் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.