ஹவுதி தாக்குதலுக்கு பதிலடி: ஏமனில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல்

3 hours ago 2

சனா,

இஸ்ரேல் , ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்குமேல் நடைபெற்று வருகிறது. இந்த போரில் 52 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர் ஆதரவு அளித்து வருகின்றனர்.

ஹமாசுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அரபிக்கடல், செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும், இஸ்ரேல் மீதும் அவ்வப்போது ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள பென் குரின் சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று முன் தினம் ஏவுகணை தாக்குதல் நடத்தினர்.

இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பை மீறி ஏவுகணை விமான நிலையத்திற்குள் உள்ளே ஓடுதளம் அருகே இருந்த சாலையில் விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் 8 பேர் காயமடைந்தனர். இதையடுத்து, பென் குரின் விமான நிலைய தாக்குதலுக்கு பதிலடியாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,  விமான நிலையம் மீதான ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு பதிலடியாக ஏமன் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் விமானப்படை விமானங்கள் ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஹூடைடா நகரில் உள்ள துறைமுகம், சிமெண்ட் தயாரிக்கும் தொழிற்சாலை உள்பட பல்வேறு பகுதிகளில் அதிரடி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலால் ஹூடைடா துறைமுகம் தீப்பற்றி எரிகிறது. இந்த தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்பு தொடர்பான விவரம் இதுவரை வெளியாகவில்லை. இந்திய நேரப்படி நேற்று இரவு 11 மணியளவில் தாக்குதல் தொடங்கிய நிலையில் தற்போதுவரை தாக்குதல் நடைபெற்று வருகிறது.

Read Entire Article