
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் சமீப காலமாக பேட்டிங் மட்டுமின்றி கேப்டன்சியிலும் அசத்தி வருகிறார். சமீபத்தில் நிறைவடைந்த 18-வது ஐ.பி.எல். தொடரில் அவரது தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி இறுதிப்போட்டி வரை முன்னேறி அசத்தியது. இருப்பினும் இறுதிப்போட்டியில் 6 ரன் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் தோற்று கோப்பையை கையில் ஏந்தும் வாய்ப்பை நழுவ விட்டது.
இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் மூன்று வெவ்வேறு அணிகளை இறுதிப்போட்டிக்குள் அழைத்து சென்ற ஒரே கேப்டன் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். கடந்த 2020ம் ஆண்டு டெல்லி அணியையும், 2025ம் ஆண்டு கொல்கத்தா அணியையும், இந்த சீசனில் பஞ்சாப் அணியையும் ஸ்ரேயாஸ் ஐயர் இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றுள்ளார். வேறு எந்த வீரரும் ஒன்றுக்கு மேற்பட்ட அணிகளுக்கு இதைச் செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோக உள்ளூர் தொடர்களிலும் கேப்டன்ஷிப்பில் அசத்தலாக செயல்பட்டு வருகிறார்.
அத்துடன் இந்த ஐ.பி.எல். சீசனில் பேட்ஸ்மேனாகவும் 604 ரன்கள் குவித்து அசத்தினார். மேலும் ஐ.சி.சி. ஒருநாள் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி என அனைத்து சமீபத்திய தொடர்களிலும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் எதிர்வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவரை சேர்க்காதது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்திய வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணியின் (ஒருநாள் மற்றும் டி20) கேப்டன்சி வாய்ப்பில் ஸ்ரேயாஸ் ஐயர் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் ஸ்ரேயாஸ் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவும், டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவும் உள்ளனர். இவர்களில் ரோகித் சர்மா இன்னும் எவ்வளவு காலம்? விளையாடுவார் என்பது தெரியவில்லை. ஏனெனில் டி20 மற்றும் டெஸ்ட் வடிவத்தில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்று விட்ட அவர் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட உள்ளார். இதன் காரணமாக அந்த வடிவத்தில் இருந்தும் விரைவில் ஓய்வு பெற வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக சமீப காலங்களில் பேட்ஸ்மேனாக மட்டுமின்றி கேப்டன்சியிலும் அசத்தும் ஸ்ரேயாஸ் ஐயர், இந்திய தேர்வுக்குழுவை ஈர்த்துள்ளார். இதனால் இந்திய அணியின் கேப்டன்ஷிப் வாய்ப்பில் ஸ்ரேயாஸ் ஐயரையும் பி.சி.சி.ஐ. சேர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.