
ஸ்ரீவில்லிபுத்தூர்,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் உத்திரத்தன்று ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான திருக்கல்யாண விழா கடந்த 3-ந் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருக்கல்யாணம் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5.30 முதல் 6.30 மணிக்குள் ஆண்டாள் கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான பந்தலில் நடக்கிறது.
பக்தர்களுக்கு திருக்கல்யாண விருந்து வழங்கப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராமராஜா மற்றும் அறங்காவலர்கள், நிர்வாக அதிகாரி சக்கரை அம்மாள் ஆகியோர் செய்து வருகின்றனர்.
திருப்பதியில் இருந்து சீர்வரிசை
திருக்கல்யாணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து பட்டுப்புடவை, வஸ்திரங்கள், மங்கலப்பொருட்கள் ஆகியவற்றை சீர்வரிசையாக திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் நேற்று மாலை 6 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்கு கொண்டு வந்தனர்.
அப்போது, மேள தாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மாட வீதிகள் வழியாக அவை ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு ஆண்டாள் கோவில் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.