
திருச்சி,
தமிழில் 1949-ம் ஆண்டு ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்த 'வாழ்க்கை' படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தவர், வைஜெயந்தி மாலா. 'இரும்புத்திரை', 'பார்த்திபன் கனவு', 'தேன் நிலவு' 'பாக்தாத் திருடன்', 'சித்தூர் ராணி பத்மினி' போன்ற காலத்தால் அழியாத பல படங்களில் நடித்துள்ளார். 'வஞ்சிக்கோட்டை வாலிபன்' படத்தில் 'கண்ணும் கண்ணும் கலந்து...' என்ற பாடலுக்கு 'நாட்டிய பேரொளி' பத்மினியுடன் இணைந்து அவர் ஆடிய போட்டி பாடல், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது.
சென்னையில் பிறந்து வளர்ந்த அவர், சினிமா தாண்டி அரசியலிலும் ஜொலித்தார். மக்களவை, மாநிலங்களவை என இரண்டிலும் எம்.பி.யாக பணியாற்றினார். பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தார். இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பத்ம பூஷண் விருதைப் பெற்றவர் வைஜயந்திமாலா. வைஜெயந்தி மாலா கடந்த ஆண்டு அயோத்தியில் பரதநாட்டியம் ஆடியுள்ளார். 90 வயதாகும் நடனக் கலைஞரின் நடனத்தைக் கண்டு ரசிகர்கள் ஆச்சரியமடைந்தனர். அவரது பரதநாட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் பழம்பெரும் நடிகையும், முன்னாள் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினரான வைஜெயந்தி மாலா சாமி தரிசனம் செய்தாா். வைஜெயந்தி மாலா கடந்த வாரம் உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் திங்கள்கிழமை ஸ்ரீரங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்தாா். 91 வயதான வைஜெயந்தி மாலா மூலவா் ஸ்ரீரெங்கநாதா், தாயாா் சன்னதி, சக்கரத்தாழ்வாா் சன்னதிக்கு சக்கரநாற்காலியில் வலம் வந்து தரிசனம் செய்தாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் "ஸ்ரீரங்கம் நம்பெருமாள் மற்றும் தாயாரை தரிசனம் செய்தது மிகப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். நான் 13 வயதில் பரதநாட்டியம் அரங்கேற்றம் செய்தேன். தொடா்ந்து கடின உழைப்பால் பெயரையும், புகழையும் அடைந்தேன். உணா்ச்சியும், பக்தியும் என்னை கொண்டு செல்கின்றது. இளைஞா்கள் கடுமையாக உழைக்க வேண்டும். உழைத்தால் மட்டுமே முன்னேற முடியும்" என்றாா்.