சுற்றுலாத்துறை சார்பில் தமிழ்நாடு பயண சந்தை: 3 நாட்கள் நடக்கிறது

5 hours ago 2

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாடு பயண சந்தை -2025 வருகிற 21-ம் தேதி முதல் 23 வரை தமிழ்நாடு சுற்றுலாத்துறை மூலம் நடத்தப்படவுள்ளது. இந்த பயணச்சந்தையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயண ஏற்பாட்டாளர்களுக்கு சுமார் 4,000 சதுர மீட்டர் பரப்பளவில் கடைகள் அமைக்கப்பெற்று மாநிலத்தின் வளமான, மாறுபட்ட சுற்றுலா வாய்ப்புகளை வெளிப்படுத்தவும், சுற்றுலா தொழில் வளர்க்கவும், சுற்றுலாத்துறை முதலீடுகளை ஈர்க்கவும் இந்நிகழ்வு ஒரு முதன்மைத் தளமாக செயல்படும்.

பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்து, மாநிலத்தின் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதை உறுதி செய்து, நிலையான மற்றும் பொறுப்பான சுற்றுலாவை மேம்படுத்த தமிழ்நாடு அரசு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழ்நாடு பயண சந்தை 2025, தொழில் நிறுவனங்களின் ஈடுபாடு மற்றும் அறிவுப் பகிர்வு ஆகியவற்றிற்கான ஒரு கட்டமைக்கப்பட்ட தளத்தை வழங்குவதன் மூலம் இந்த உறுதிப்பாட்டை வலுப்படுத்தும். இந்த நிகழ்வு தமிழ்நாட்டின் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும், முற்போக்கான முயற்சிகளை காட்சிப்படுத்தும்.

மாநிலத்திலேயே முதன்முறையாக செயல்படுத்தப்பட்ட தமிழ்நாடு சுற்றுலாக் கொள்கை 2023, சுற்றுலாத் துறையின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. இக்கொள்கை, ஒற்றைச் சாளர முறையின் மூலம் தனியார் துறையின் பங்கேற்பை நெறிப்படுத்துவதுடன், தற்போதுள்ள தனியார் பங்களிப்பு சுற்றுலாத் திட்டங்களை திறம்பட செயல்படுத்த உறுதி செய்கிறது. தகுதியான சுற்றுலாத் திட்டங்களுக்கு ஒப்புதல்களை வழங்குவதன் மூலமும், உறுதியளிக்கப்பட்ட ஊக்கத்தொகைகளை வழங்குவதன் மூலமும் சுற்றுலா மேம்பாட்டுப் பிரிவு முதலீட்டாளர்களுக்கு மேலும் ஆதரவளிக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article