சென்னை: ஸ்ரீபெரும்புதூர் உட்பட 3 பேரூராட்சிகளை நகராட்சியாக தரம் உயர்த்தி தமிழக அரசு அரசிதழில் வெளிட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 2023-24ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கை விவாதத்தின் மீதான பதிலுரையில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ‘ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு உள்ளிட்ட சில பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்’ என்று அறிவித்தார். இதனையடுத்து தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் திருத்த சட்டத்தின்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவையாறு ஆகிய 3 பேரூராட்சிகளை, நகராட்சிகளாக அமைத்து உருவாக்குவதற்கான உத்தேச முடிவு செய்து கடந்த ஆகஸ்ட் மாதம் முதல்கட்ட அறிவிப்பு வெளியானது. மேலும், இந்த அறிவிப்பு குறித்து அப் பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி பெறப்பட்ட அனைத்து கருத்துகளையும் பரிசீலனை செய்த தமிழக அரசு, தற்போது ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசிதழில் வெளியிட்டுள்ளது.
The post ஸ்ரீபெரும்புதூர் உட்பட 3 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்வு: அரசிதழில் வெளியீடு appeared first on Dinakaran.