வாஷிங்டன் : மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது வீடியோ கான்ஃபரன்சிங் தலமான ஸ்கைப் -ஐ வரும் மே 5ம் தேதி முதல் மூடப்போவதாக அறிவித்துள்ளது. ஸ்கைப் பதிலாக மைக்ரோசாப்ட் டீம்ஸ் செயலியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்கைப் செயலி 2003 ம் ஆண்டு நிக்லாஸ் ஜென்ஸ்ட்ராம் என்னும் டெவலப்ரால் முதன் முதலில் வெளியிடப்பட்டது. வீடியோ வழி உரையாடல்கள், வீடியோ கான்ஃபரன்சிங், வாய்ஸ் கால்ஸ் போன்ற வசதிகள் இந்த செயலியில் கொண்டு வரப்பட்டது. மேலும், கூடுதல் வசதிகளாக பயனர்கள் ஸ்கைப் தளத்திலேயே இன்ஸ்டன்ட் மெசேஜிங், ஃபைல் டிரான்ஸ்பர் உள்ளிட்ட அம்சங்களை பயன்படுத்திக் கொள்ளும் வகையில், பல சிறப்பு அம்சங்கள் கொண்டு வரப்பட்டன.
இதனால், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களுடைய பணியாளர்கள் உடனான வீடியோ கான்ஃபரன்சிங் மீட்டிங்கிற்கு ஸ்கைப் தலத்தையே பயன்படுத்தினர். கணினி, மொபைல் போன்களிலும் ஸ்கைப்பை பயன்படுத்தும் விதத்தில் வெளியிடப்பட்டதால், 2005ம் ஆண்டில் ஸ்கைப் பயனர்களின் எண்ணிக்கை 5 மில்லியனை எட்டியது. 2011ம் ஆண்டில் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஸ்கைப்பை 8.5 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியது. அதன் பிறகு மைக்ரோசாப்ட் தனது சேவைகளுடன் ஸ்கைப் தளத்தின் சேவைகளையும் சேர்த்து வழங்கியது.
இதனிடையே கொரானா காலக்கட்டத்தில் ஜூம் செயலி வளர்ச்சி பெற்றது. வீடியோ கான்ஃபரன்சிங், ஆன்லைன் மீட்டிங் உள்ளிட்ட பயன்பாடுகளுக்கு ஜூம் செயலியை பயனர்கள் பயன்படுத்தினர். ஜூம் செயலி, கூகுள் மீட் உள்ளிட்ட செயலிகளை பயனர்கள் பெரிதும் பயன்படுத்தியதால் ஸ்கைப் தளத்திற்கான பயனர்கள் எண்ணிக்கை குறைந்தது. இந்த நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் ஸ்கைப் தளத்தின் சேவைகளை வரும் 5ம் தேதி முதல் நிரந்தரமாக மூடவுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஸ்கைப் பயனர்கள் மே 5-ம் தேதி வரையில் அந்த தளத்தை பயன்படுத்தலாம் என்றும் அதன் பிறகு டீம்ஸ் செயலியை பயனர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் மைக்ரோசாப்ட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. ஸ்கைப் பயனர்கள் தங்களது பயனர் விவரங்களை கொண்டே டீம்ஸ் செயலியில் லாகின் செய்து கொள்ளலாம் என்றும் பழைய சாட்கள் மற்றும் தொடர்புகள் போன்றவை அப்படியே இருக்கும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
The post ஸ்கைப் தளத்தின் சேவைகளை வரும் 5ம் தேதி முதல் நிரந்தரமாக மூடவுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவிப்பு!! appeared first on Dinakaran.