
பாட்னா,
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 35 பந்தில் செஞ்சுரி அடித்து ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்த ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் வைபவ் சூர்யவன்ஷி (வயது 14) பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்.
நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கடந்த மாதம் 28-ம் தேதி ஜெய்ப்பூரில் நடந்த லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்சை பந்தாடியது. இதில் குஜராத் நிர்ணயித்த 210 ரன் இலக்கை ராஜஸ்தான் அணி வைபவ் சூர்யவன்ஷியின் (101 ரன், 38 பந்து, 7 பவுண்டரி, 11 சிக்சர் ) சரவெடியான சதத்தின் உதவியுடன் 15.5 ஓவர்களில் விரட்டிப்பிடித்தது.
ஆட்டநாயகன் விருது பெற்ற 14 வயது வைபவ் சூர்யவன்ஷி ஒட்டுமொத்த 20 ஓவர் கிரிக்கெட்டில் குறைந்த வயதில் சதம் கண்ட வீரர் என்ற முத்திரையை பதித்தார். மேலும் 200 ரன்னுக்கு மேலான இலக்கை விரைவாக எட்டிப்பிடித்த அணி என்ற சாதனையும் ராஜஸ்தான் வசம் ஆனது. இந்த போட்டி முடிந்ததும் அவரை போனில் தொடர்பு கொண்டு பாராட்டிய பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், அவருக்கு ரூ.10 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இந்த நிலையில், ஐ.பி.எல் தொடரில் அனைவராலும் பாராட்டு பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை பீகார் சென்றுள்ள பிரதமர் மோடி நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். பாட்னா விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வைபவ் சூரியவன்ஷி மற்றும் அவரது குடும்பத்தினர் சந்தித்து பேசினர். மேலும் "வைபவின் கிரிக்கெட் திறன் நாடு முழுவதும் பாராட்டை பெற்று வருகிறது. அவரது எதிர்கால பயணங்களுக்கு எனது வாழ்த்துகள்" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.