
ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி. திருச்சியில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வைகோ 1978-ம் ஆண்டு முதன்முதலாக நாடாளுமன்றத்திற்கு சென்றபோது இந்தி திணிப்புக்கு எதிராக பேசினார். தற்போது தன்னுடைய 81 வயதில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் முடியும் நேரத்திலும் கூட மும்மொழி கொள்கைக்கும், இந்தி திணிப்புக்கும் எதிராக பேசினார்.
3 முறை மந்திரி பதவி தேடி வந்தபோதிலும் அதை மறுத்தவர் வைகோ. அந்த தலைவருக்கு மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக வாய்ப்பு அளிக்காதது எங்களுக்கு வருத்தமும், வேதனையும் அளிக்கிறது. நாங்கள் கடந்த ஆண்டு தேர்தல் நேரத்திலேயே மாநிலங்களவை உறுப்பினர் பதவி கேட்டோம். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என தி.மு.க. தலைமை தெரிவித்தார்கள்.
மாநிலங்களவை எம்.பி. பதவி கிடைக்கும் என நம்பினோம். ஆனால் இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. தமிழ்நாட்டின் நலனுக்காக தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து பணியாற்றுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.