வைகாசி விசாக மகிமைகள்... பராசர முனிவரின் மகன்களுக்கு அருளிய செந்தூர் முருகன்

1 day ago 5

திருச்செந்தூர் முருகன் கோவில் 4 யுகங்களிலும் நடந்த பல்வேறு சிறப்பான நிகழ்வுகளுடன் தொடர்பு கொண்டதாகும். நான்கு யுகங்களில் எத்தனையோ நிகழ்வுகள் நடந்துள்ளன. அதிலும் முனிவர்கள் கொடுத்த சாபங்களும் அதில் இருந்து விமோசனம் பெற்ற புராண வரலாறுகளும் இன்றும் பதிவுகளாக உள்ளன. அதில் துவாபர யுகத்தில் நடந்த ஒரு புராண நிகழ்ச்சி இன்றும் திருச்செந்தூர் ஆலயத்தில் வைகாசி மாதத்தில் பெரிய விழாவாக கொண்டாடப்படுகிறது.

பராசரரின் மகன்கள்

வசிஷ்ட முனிவர் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். மிகப்பெரிய சக்தி வாய்ந்த முனிவர். இவரது பேரன் பராசர முனிவர். இவரும் தாத்தாவுக்கு நிகரான ஆற்றல்கள் கொண்டவர். மகரிஷி என்று போற்றப்பட்ட இவர் ஏராளமான இந்து புராண நூல்களின் தொடக்கத்துக்கு வித்திட்டவர். விஷ்ணு புராணத்தை முதல் முதலில் தொகுத்து எழுதியவர் இவர்தான் என்று புராணங்கள் சொல்கின்றன. இவரது மகன் வியாசர். இவர் பராசர முனிவருக்கும் சத்தியவதி என்ற பெண்ணுக்கும் மகனாக பிறந்தவர் ஆவார். பிற்காலத்தில் தந்தை பராசர முனிவரின் குறிப்புகளை வைத்து வியாசர் வேதங்களில் சிறப்பு பெற்றார் என்பார்கள். இதன் காரணமாகவே வேத வியாசர் என்ற சிறப்பு பெயர் அவருக்கு ஏற்பட்டது.

துவாபர யுகத்தில் வாழ்ந்த முனிவர்களில் முதன்மை முனிவராக திகழ்ந்த பராசர முனிவர் ஜோதிட நூல்கள் எழுதுவதிலும் புகழ் பெற்று இருந்தார். இவரது ஜோதிட குறிப்புகளை இன்றும் ஜோதிடர்கள் பின்பற்றுகிறார்கள்.

எச்சரிக்கை

இத்தகைய சிறப்புடைய பராசர முனிவருக்கு தப்தர், அனந்தர், நந்தி, சதுர்முகர், சக்ரபாணி, மாலி என்று மேலும் 6 மகன்கள் இருந்தனர். இந்த 6 மகன்களும் மிக மிக சுட்டித்தனம் கொண்டவர்களாக திகழ்ந்தனர். பெற்றோர்களின் பேச்சை கேட்காமல் குறும்பு செய்வது அவர்களுக்கு வழக்கமாக இருந்தது.

ஒருதடவை அவர்கள் 6 பேரும் குளம் ஒன்றில் இறங்கி நீராடினார்கள். அந்த குளத்தில் குளிப்பது அவர்களுக்கு சுகமாக இருந்ததால் பல்வேறு வடிவம் எடுத்து விளையாடினார்கள். இதன் காரணமாக அந்த குளத்தின் தண்ணீர் கடுமையாக மாசுப்பட்டது. அந்த குளத்தில் வாழ்ந்து வந்த மீன்கள், தவளைகள் உள்பட நீர்வாழ் உயிரினங்கள் மிகவும் அவதிக்குள்ளாகின. சில மீன்கள் அசுத்தமான தண்ணீர் காரணமாக செத்தும் விழுந்தன. என்றாலும் பராசர முனிவரின் 6 மகன்களும் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து விளையாடிக் கொண்டு இருந்தனர்.

அந்த சமயத்தில் பராசர முனிவர் அந்த குளத்தில் நீராடுவதற்காக வந்து கொண்டு இருந்தார். தனது 6 மகன்களும் அந்த குளத்தை பாழ்ப்படுத்தி விட்டதை நேரில் பார்த்து கடும் கோபம் அடைந்தார். உடனே தனது 6 மகன்களையும் எச்சரித்தார். "இந்த குளத்தின் நீரானது கங்கை நீருக்கு சமமாகும். சிவபெருமானின் தலையில் இருந்து உற்பத்தியாகி நாட்டு மக்களுக்கு பாவங்களை போக்கும் சக்தி கொண்ட அந்த புனித நீரை கெட்டுப்போகும் வகையில் செயல்படுவது மிகப்பெரிய பாவம் ஆகும். எனவே இனி இந்த குளத்தை அசுத்தப்படுத்தாதீர்கள். குளித்தது போதும். வெளியே வாருங்கள்" என்று மகன்களிடம் பராசர முனிவர் கூறினார்.

சாபம் கொடுத்த முனிவர்

ஆனால் பராசர முனிவரின் 6 மகன்களும் குளிப்பதில் இருந்த சுகம் காரணமாக தந்தையின் சொல்லை செவி கொடுத்து கேட்கவில்லை. தந்தை சொல்லை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து குளத்தில் ஆட்டம் போட்டபடி இருந்தனர். அவர்கள் போட்ட ஆட்டத்தில் மேலும் பல மீன்கள் செத்து மிதந்தன. இதை கண்டதும் பராசர முனிவர் கடும் அதிர்ச்சி அடைந்தார். மீன்களின் அழிவுக்கு காரணமான தனது 6 மகன்களுக்கும் அவர் சாபம் கொடுத்தார்.

'இந்த குளத்தில் உள்ள மீன்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டு வேதனை அடைந்ததோ அதை உணரும் வகையில் 6 பேரும் மீனாக மாறுங்கள்' என்று கோபத்தில் அவர் சாபமிட்டார். அடுத்த நிமிடம் அவரது 6 மகன்களும் மீன்களாக மாறினார்கள். திடீரென தங்களது உருவம் மாறிப் போனதை உணர்ந்த 6 பேரும் மிகவும் வருந்தினார்கள். தந்தையின் சொல்லை கேட்காமல் விளையாடியதால் ஏற்பட்ட விபரீதத்தை அறிந்து தங்கள் தவறை உணர்ந்தனர். தங்கள் தந்தையிடம் அவர்கள் 6 பேரும் மன்றாடினார்கள். செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டனர். அதோடு தாங்கள் மீனாக மாறியதற்கு காரணமான சாபத்தில் இருந்து விடுதலை பெறுவதற்கான வழியையும் சொல்லுமாறு கெஞ்சி கேட்டனர்.

இதனால் அவர்கள் 6 பேர் மீதும் பராசர முனிவருக்கு இரக்கம் ஏற்பட்டது. அவர் தனது மகன்களிடம், "நீங்கள் தொடர்ந்து இந்த குளத்திலேயே வாழ்ந்து வாருங்கள். பார்வதிதேவியின் அருளால் குறிப்பிட்ட காலத்தில் உங்களுக்கு சாப விமோசனம் கிடைக்கும்" என்று தெரிவித்தார்.

இதையடுத்து 6 பேரும் அந்த நீர்நிலையிலேயே வாழ்ந்து வந்தனர். எப்படியும் தங்களுக்கு பார்வதி தேவியின் கருணை பார்வை கிடைக்கும் என்று நம்பிக்கையோடு காத்திருந்தனர்.

 

சாப விமோசனம்

இதற்கிடையே சிவபெருமான் நெற்றியில் இருந்து வெளிப்பட்ட 6 தீப்பொறிகள் மூலம் உருவான கந்த பெருமானை பார்வதிதேவி வளர்த்து வந்தார. ஒருநாள் பார்வதி தேவி சிவலோகத்தில் முருகப்பெருமானுக்கு ஞானப்பாலை வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது அந்த ஞானப்பாலில் இருந்து ஒரு துளி சிதறியது. அந்த துளி அளவு பால் பூலோகத்தில் பராசர முனிவரின் 6 மகன்களும் 6 மீன்களாக வாழும் குளத்தில் விழுந்தது.

அந்த துளி அளவு பாலை 6 மீன்களும் அருந்தின. அடுத்த வினாடி 6 மீன்களும் சாப விமோசனம் பெற்றன. அந்த மீன்கள் மீண்டும் பராசர முனிவரின் மகன்களாக மாறினார்கள். அதோடு பார்வதி தேவியின் ஞானப்பாலை அருந்திய காரணத்தால் அந்த 6 பேருக்கும் முனிவர்களுக்குரிய ஆற்றல் கிடைத்தது. 6 பேரும் முனிவர்களாக வெளியில் வந்தனர். தங்களுக்கு சாப விமோசனம் வழங்கிய சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் நன்றி செலுத்த முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் சிறப்பு ஹோமங்கள் வளர்த்து சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் பூஜைகள் செய்து நன்றி தெரிவித்தனர்.

அப்போது அங்கு ஒரு அசரீரி ஒலித்தது. "நீங்கள் 6 பேரும் திருச்செந்தூர் தலத்துக்கு சென்று உரியமுறையில் வழிபாடுகள் செய்து தவம் செய்யுங்கள். உங்கள் தவத்தை மேம்படுத்தும் வகையில் திருச்செந்தூர் முருகன் உங்களுக்கு அருள்புரிவார்" என்று அசரீரி கேட்டது.

திருச்செந்தூரில் சேவை

இதையடுத்து 6 பேரும் திருச்செந்தூர் சென்றனர். அங்கு முருகனை தியானித்து நீண்ட தவம் இருந்தனர். அவர்களது தவத்தை கண்டு மகிழ்ச்சி அடைந்த முருகப்பெருமான் வைகாசி விசாக தினத்தன்று அந்த 6 பேருக்கும் நேரில் காட்சி கொடுத்தார்.

அதோடு திருச்செந்தூர் தலத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு உதவும்படி அருளாசி புரிந்தார். அதை ஏற்று அந்த 6 பேரும் திருச்செந்தூரில் சேவை செய்து வருகிறார்கள். இதை பிரதிபலிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாக திருவிழா திருச்செந்தூரில் 10 நாட்கள் பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது.

இந்த விழாவின் 10-வது நாள் அதாவது வைகாசி விசாகம் தினத்தன்று முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடத்தி காட்டப்படுகிறது. துவாபர யுகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்று பல ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் திருச்செந்தூரில் நடத்திக் காட்டப்படுவது தனித்துவம் கொண்டதாக கருதப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான இந்த நிகழ்ச்சி, திருச்செந்தூர் தலத்தில் வருகிற 9-ந்தேதி (திங்கட்கிழமை) மாலை 4.30 மணிக்கு நடத்திக் காட்டப்பட உள்ளது. அன்று திருச்செந்தூர் கோவில் மண்டபத்தில் நீர்த்தொட்டி அமைக்கப்படும். அந்த நீர்த் தொட்டியில் 6 மீன் பொம்மைகளை மிதக்க விடுவார்கள்.

அங்கு ஜெயந்திநாதர் எழுந்தருள்வார். திருச்செந்தூர் முருகனின் உற்சவர்களில் ஒருவரான ஜெயந்திநாதர் பார்வதிதேவி வழங்கிய ஞானப்பாலை குடிக்கும்போது ஒரு துளி சிந்துவது போல காட்சி அமைக்கப்படும். அந்த ஒருதுளி பாலை 6 மீன்களும் குடிப்பது போன்றும் பக்தர்களுக்கு காண்பிக்கப்படும். ஞானப்பாலை அருந்தும் மீன்கள் 6 முனிவர்களாக மாறுவதும் நடத்திக் காட்டப்படும்.

பாவங்கள் விலகும்

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் இந்த புராண நிகழ்வை காண்பதற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் திரள்வார்கள். பராசர முனிவர் மகன்கள் சாப விமோசனம் பெறும் நிகழ்ச்சியை திருச்செந்தூர் தலத்தில் நேரில் கண்டுகளித்து முருகனை வழிபட்டால் நம் வாழ்வில் ஏற்பட்ட முன்வினை பாவங்கள் விலகும் என்பது ஐதீகம். அது மட்டுமின்றி முன்வினை பாவங்களால் உருவாகும் துன்பங்களை முருகன் நிவர்த்தி செய்வார் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் உள்ளது.

சாபங்கள் காரணமாக எத்தனையோ பேர் தங்களையும் அறியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தங்களுக்கு சாபம் இருக்கிறது என்பதைக்கூட உணராதவர்கள் லட்சக்கணக்கில் உள்ளனர். அவர்கள் நம்பிக்கையோடு திருச்செந்தூர் தலத்துக்கு சென்று இந்த புராண நிகழ்வை நேரில் கண்டால் அவர்களின் நிச்சயம் ஆத்மா சுத்தப்படும் என்பது ஐதீகம்.

இந்த நிகழ்ச்சியை பார்க்க செல்பவர்கள் அன்றைய தினம் முருகனை மனதில் நிறுத்தி விரதம் இருப்பது மிக மிக நல்லது. திருச்செந்தூர் முருகனை நம்பி விரதம் இருந்து வைகாசி விசாக நிகழ்ச்சிகளை கண்டுகளித்தால் நிச்சயம் வாழ்வில் மாற்றங்கள் ஏற்படும். வைகாசி விசாகம் விரதம் இருக்கும் நாளில் திருப்புகழ், கந்தசஷ்டி கவசம் மற்றும் திருச்செந்தூர் தலம் மீது பாடப்பட்டு இருக்கும் பாடல்களை மன முருகி பாடினால் சாபங்கள் விலகி குலம் தழைக்கும். சகல செல்வங்களும் தேடி வரும் என்பது நம்பிக்கை.

வாய்ப்பு இருப்பவர்கள் அன்றைய தினம் முருகப் பெருமானுக்கு சிவப்பு அரளி அல்லது செம்பருத்தி மலர்களை வழங்கி வழிபடலாம். வீட்டில் முருகன் படத்தின் முன்பு பாசிப் பருப்பு பாயாசம் நைவேத்தியம் செய்து வழிபடுவது மிகவும் சிறப்பு. 

Read Entire Article