வைகாசி திருவிழா: ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் விமரிசையாக நடந்த தேரோட்டம்

5 hours ago 4

நவ திருப்பதி தலங்களில் 9வது தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் நம்மாழ்வார் அவதாரம் செய்ததை கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் வைகாசித் திருவிழா 10 தினங்கள் நடைபெறும். அவ்வகையில் இந்த ஆண்டு வைகாசி திருவிழா கடந்த மாதம் 31-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

விழாவின் ஐந்தாம் நாளில் சுவாமி நம்மாழ்வார், நவ திருப்பதி பெருமாள்களுக்கு ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் முன்பு மங்களாசாசனம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. பின்னர் இரவு 11 மணியளவில் நவதிருப்பதியின் பெருமாள் உற்சவர்கள் கருட வாகனத்தில் எழுந்தருளும் கருட சேவை பிரமாண்டமாக நடந்தது.

இந்நிலையில் விழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம் இன்று விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி காலை 4 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4.15 மணிக்கு திருமஞ்சனம், 4.45 மணிக்கு தீபாராதனை, 5.30 மணிக்கு நித்தியல் கோஷ்டியைத் தொடர்ந்து, 6.30 மணிக்கு அர்ச்சகர்கள் கண்ணன், விவேக், பாலாஜி ஆகியோர் சுவாமி நம்மாழ்வார் எழுந்தருளும் பல்லக்கை அலங்கரித்தார். 7.05 மணிக்கு சுவாமி நம்மாழ்வார் தேரில் எழுந்தருளினார். 7.45 மணிக்கு நாங்குனேரி ஜீயர் ஸ்வாமி வடம் பிடிக்க தேரோட்டம் துவங்கியது. பக்தர்கள் 'கோவிந்தா.. கோபாலா" என பக்தி முழக்கமிட்டபடி வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேர் மேல ரத வீதியில் புறப்பட்டு வடக்கு ரத வீதி, கீழ ரத வீதி, தெற்கு ரத வீதி வழியாக காலை 9.30 மணியளவில் நிலைக்கு வந்தது. நாளை தீர்த்தவாரியுடன் விழா நிறைவடைகிறது.

Read Entire Article