
சென்னை பூந்தமல்லியில் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்து படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட 5-வது வார்டு சி.ஆர்.எம். நகர் பகுதியில் நகராட்சி பூங்கா ஒன்று உள்ளது. இந்த பூங்காவில் மாலை நேரத்தில் சிறுவர்கள் விளையாடுவது வழக்கம். இந்த நிலையில் இன்று மாலை திடீரென பெய்த மழையால் பூங்காவில் இருந்த மின்கம்பத்தில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மழை நின்றதும், சிறுவர்கள் பூங்காவில் விளையாடியுள்ளனர். அப்போது மின்கம்பத்துக்கு அருகே விழுந்த பந்தை எடுக்க சென்ற சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதைப் பார்த்த மற்றொரு சிறுவன் காப்பாற்ற முயன்றபோது அவன் மீதும் மின்சாரம் பாய்ந்தது.
இதுகுறித்து அறிந்த பூங்கா ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக மின்சாரத்தை நிறுத்தி இரண்டு சிறுவர்களையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவரும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.