சென்னை: வேளாண் விளைபொருள் கொள்முதல் வாரியம் என்ற புதிய பொதுத்துறை நிறுவனத்தை தமிழக அரசு தொடங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் காவிரி பாசன மாவட்டங்கள் தவிர மீதமுள்ள மாவட்டங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் நெல் கொள்முதல் செய்யப்படாது என்றும், அந்த மாவட்டங்களில் நெல் கொள்முதல் செய்யப்படும் அதிகாரம் தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திற்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் தமிழக அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு திமுக அரசு இழைக்கும் பெரும் துரோகம் ஆகும்.