திருச்சி, மே 30: திருச்சி மாவட்ட வேளாண்மை இணை இயக்கநர் அலுவலகத்தில், வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கான பி.ஓ.எஸ் கருவி (பாயின்ட் ஆப் சேல்) வழங்கும் விழா நடந்தது. திருச்சி மாவட்டத்தில் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு புதிய மேம்படுத்தப்பட்ட ஆண்ட்ராய்டு பி.ஒ.எஸ் இயந்திரம் வழங்கும் விழா வேளாண்மை இணை இயக்குநர் வசந்தா தலைமையில் நடந்தது. வேளாண்மை உதவி இயக்குநர் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு) மாரியப்பன், 137 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு புதிய பி.ஓ.எஸ் இயந்திரங்களை வழங்கி, மண்வள அட்டை அடிப்படையில் பயோ மெட்ரிக் மூலம் விவசாயிகளுக்கு மானிய உரம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்றார்.
மேலும் உரக்கட்டுப்பாடு சட்டத்தின் அம்சங்களை விளக்கிக்கூறி, இயந்திரத்தில் அட்மின் மாற்றம் செய்வதன் அவசியத்தையும் விளக்கினார். ஓயாசிஸ் நிறுவன பொறியாளர் தனபால், மேம்படுத்தப்பட்ட புதிய இயந்திரத்தின் கூடுதல் அம்சங்கள் குறித்து விளக்கினார். வேளாண்மை அலுவலர் ஜனனி ஜா அனைத்து வகையான உரங்களும் இருப்பில் வைக்க வேண்டும் எனவும், உரங்களை பி.ஓ.எஸ் இயந்திரம் மூலமாக வழங்கி உடனடியாக இருப்பு பதிவேட்டில் கழிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் லிமிடேட் நிறுவன மண்டல மேலாளர் அன்பு விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
The post வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு பிஓஎஸ் கருவி appeared first on Dinakaran.