வேதாரண்யம், ஜூன் 5: மாணவர்களின் வெற்றிக்கும் பாதுகாப்புக்கும் ஆசிரியர்கள் அர்ப்பணிப்போடு பணிபுரிய வேண்டும் என நாகை மாவட்ட கல்வி அலுவலர் வலியுறுத்தினார். வேதாரண்யம் ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கூட்டம் நாகை மாவட்டக் கல்வி அலுவலர் துரைமுருகு தலைமையில் நடைபெற்றது. வட்டாரக் கல்வி அலுவலர் ஜெயந்தி வரவேற்றார்.
கூட்டத்தில் மாவட்டக் கல்வி அலுவலர் பேசியதாவது:
மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுரைப்படி அனைத்து தொடக்க நடுநிலைப் பள்ளிகளிலும் இக்கல்வியாண்டில் நடைபெற உள்ள ஸ்லாஷ் தேர்வில் 3,5,8 ஆம் வகுப்புகளின் மாணவர்கள் நூறு சதவீத மதிப்பெண் பெற அனைத்து ஆசிரியர்களும் தீவிரமாக மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். தமிழக அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் பெற்றோர்களிடம் எடுத்துக் கூறி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். பள்ளிகள் தூய்மையாக இருக்கவும், மாணவர்கள் பாதுகாப்பாக பள்ளி வந்து வீடு திரும்புவதையும் ஒவ்வொரு தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியரும் தங்கள் முழுப்பொறுப்பாக எடுத்து கொள்ள வேண்டும். கடந்த ஆண்டு நடைபெற்ற ஸ்லாஷ் தேர்வில் நாகை மாவட்ட தேர்வு முடிவில் அதிக மதிப்பெண் உயர பாடுபட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் பாராட்டுகள். இவ்வாறு பேசினார். முன்னதாக அனைத்து தலைமையாசிரியர்கள் சார்பில் மாவட்ட கல்வி அலுவலருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. வட்டாரக் கல்வி அலுவலர் ராமலிங்கம் நன்றி கூறினார்.
The post வேதாரண்ய ஒன்றிய தொடக்க, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கூட்டம் appeared first on Dinakaran.