வேங்கைவயல் கிராமத்திற்கு செல்ல அனுமதி கோரி மனு: ஐகோர்ட் கிளை சரமாரி கேள்வி

3 hours ago 1

மதுரை: வேங்கைவயல் கிராமத்திற்கு செல்ல அனுமதி கோரிய வழக்கில் ஐகோர்ட் கிளை சரமாரி கேள்வி எழுப்பி உள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்த மலர்மன்னன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி குடிநீரில் கடந்த 2022ல் மனிதக்கழிவு கலக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து வழக்கு விவரங்கள் குறித்து சேகரிக்கவும், வழக்கு சம்பந்தமாக அவர்களுக்கு உதவி செய்வதற்கு வேங்கைவயல் கிராமத்திற்கு செல்ல முயற்சிதேன். போலீசார் அனுமதிக்கவில்லை. எனவே, வேங்கைவயல் கிராமத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழக்கு சம்பந்தமாக உதவி செய்ய அனுமதிக்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி பி.தனபால் முன் விசாரணைக்கு வந்தது. அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகம்மது ஜின்னா, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் அன்புநிதி ஆஜராகி, மனுதாரர், ‘‘வழக்கின் குற்றவாளிகளின் வழக்கறிஞரோ அல்லது புகார் தரப்பு வழக்கறிஞரோ இல்லை. மனுதாரர் ஒரு அரசியல் இயக்கத்தை சார்ந்தவராக உள்ளார். கடந்த மாதம் குற்றவாளி ஒருவர் வீட்டில் நடைபெற்ற துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனைவருக்கும் அனுமதி வழங்கப்பட்டது. தற்போது, மனுதாரர் வழக்கறிஞராக தனிப்பட்ட முறையில் சென்று வர எந்த தடையும் இல்லை. ஆனால் அரசியல் சார்புடைய நபராக செல்ல அனுமதிக்க முடியாது. சம்பந்தப்பட்ட பகுதியில் வெளிஆட்கள் வர தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, மனுதாரர் அங்கு செல்ல அனுமதிக்க முடியாது’’ என்று தெரிவித்தனர்.

அப்போது நீதிபதி, ‘‘மனுதாரர் சம்பந்தப்பட்ட குற்றவாளியிடம் ஏதேனும் வக்காலத்து பெற்றுள்ளாரா? அவ்வாறு இல்லாதபட்சத்தில் யாரைப் பார்க்க செல்கிறீர்கள்? சட்ட உதவி செய்வதாக இருந்தால் அவர்களுக்கு உதவி செய்ய சட்ட உதவி மையம் இருக்கிறது. இதில் எதுவும் இல்லாதபட்சத்தில் மனுதாரரை எவ்வாறு அனுமதிக்க முடியும்? மேலும் வேங்கைவயல் விவகாரம் குறித்து மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே, இந்த மனு குறித்து போலீஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.

The post வேங்கைவயல் கிராமத்திற்கு செல்ல அனுமதி கோரி மனு: ஐகோர்ட் கிளை சரமாரி கேள்வி appeared first on Dinakaran.

Read Entire Article