கோவை : கோவை மாநகராட்சி பகுதியில் தெருநாய்களின் நடமாட்டம் பலமடங்கு அதிகரித்து விட்டது. தெருநாய்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில், மாநகரில் உக்கடம், ஒண்டிப்புதூர், சீரநாயக்கன்பாளையம் ஆகிய 3 இடங்களில் கருத்தடை மையங்கள் அமைக்கப்பட்டு, தெருநாய்களை பிடித்து கருத்தடை செய்யும் பணி அன்றாடம் நடக்கிறது.
இருப்பினும், தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியவில்லை. தெருநாய் கடி தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்துக்கு நிறைய புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. கோவை அரசு மருத்துவமனைக்கும் அன்றாடம் பல பேர் சிகிச்சைக்கு வருகை தருகின்றனர்.
இந்நிலையில், தெருநாய் கடி தொடர்பாக உடனுக்குடன் தகவல் அறியவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைந்து சிகிச்சை அளிக்கவும் `ஹாட்லைன் எண்’ அறிமுக நிகழ்ச்சி கோவை டவுன்ஹால் அருகே உள்ள அரசு கால்நடை பன்முக மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடந்தது. 98937-89491 என்ற ஹாட்லைன் எண்ணை, மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் இளங்கோ வெளியிட்டார். பின்னர், பாதிக்கப்பட்ட மக்கள் 24 மணி நேரமும் இந்த எண்ணில் தொடர்புகொள்ளலாம் என அறிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி உதவி நகர்நல அலுவலர் டாக்டர் பூபதி, மாநகராட்சி பூங்கா இயக்குனரும், கால்நடை மருத்துவருமான சரவணன், கால்நடை மருத்துவர் மோகன்ராஜ், டாக்டர் மினி வாசுதேவன், தன்னார்வலர்கள் நமிதா நாயர், முபீனா உள்பட பலர் பங்கேற்றனர்.
The post வெறிநாய் கடியா… இனி கவலை வேண்டாம்… உடனடி தகவல் அளிக்க `ஹாட்லைன் எண்’ அறிமுகம் appeared first on Dinakaran.