கோவை: கோவை அருகே இன்று அதிகாலை சாலை தடுப்பு சுவரில் மோதி மின்சார பேருந்து எரிந்து சேதமானது. டிரைவர் உள்பட பேருந்தில் பயணம் செய்த 18 பயணிகள் படுகாயமடைந்தனர். திருச்சியிலிருந்து கோவை நோக்கி நேற்றிரவு தனியார் மின்சாரப் பேருந்து வந்து கொண்டிருந்தது. பேருந்தில் 26 பயணிகள் இருந்தனர். இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த சென்னியாண்டவர் கோவில் அருகே பைபாஸ் சாலையில் வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை தடுப்பு சுவரில் மோதியது.
மோதிய வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதையடுத்து அலறியடித்த பயணிகள் பேருந்திலிருந்து இறங்கியோடி தப்பினர். அதற்குள் டிரைவர் உள்பட 18 பயணிகள் பலத்த காயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கருமத்தம்பட்டி தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி பேருந்தில் தீயை அணைத்தனர். இருப்பினும் பேருந்து முற்றிலும் எரிந்து எலும்புக்கூடாக காட்சியளித்தது. விபத்தில் படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்த விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
The post கோவை அருகே இன்று பயங்கரம்: சாலை தடுப்பு சுவரில் மோதி மின்சார பேருந்து எரிந்து சேதம் appeared first on Dinakaran.