வெயில் காலத்தில் பாடாய்ப்படுத்தும் வியர்க்குரு.. தீர்வுகள் என்னென்ன?

3 hours ago 1

வியர்வை சுரப்பிகள் நமது உடலெங்கும் உள்ள தோலில் எண்ண முடியாத அளவில் இருக்கின்றன. இதில் கால் பாதத்தில் தான் மற்ற இடங்களைத் தவிர சற்று அதிகமாக இருக்கின்றன. உதடு, வெளிக்காது, நகத்தின் அடிப்பகுதி, பெண்களின் பிறப்புறுப்பு, ஆண்களின் பிறப்புறுப்பு, இந்த இடங்களில் மட்டும் தான் வியர்வை சுரப்பிகள் இல்லை.

ஒரு நாளைக்கு சுமார் அரை லிட்டரிலிருந்து, முக்கால் லிட்டர் வரை வியர்வை நீர் உடலிலிருந்து வெளியேறுவதுண்டு. சிலருக்கு எவ்வளவு அதிகமான வெயிலில் நின்றாலும் வியர்வையே வராது என்பார்கள். சிலருக்கு குளித்துவிட்டு வந்ததுபோல் அதிகமாக வியர்த்துக் கொட்டும் என்பார்கள்.

உடலின் வெப்ப நிலையை பராமரித்து, காப்பவை வியர்வைச் சுரப்பிகள் ஆகும். உடலின் உள் வெப்பம் அதிகமானால், உடனே வியர்வை சுரப்பிகள் நீரை உடலிலிருந்து தோலின் மேல் பகுதிக்கு வியர்வையாக வெளியேற்றும். தோலின் மேல் பகுதிக்கு வந்த வியர்வை நீர் உடனே ஆவியாகிவிடும். இவ்வாறு தலையிலிருந்து கால் வரை உடல் முழுவதும் , வியர்வை தோலின் மேல் பகுதிக்கு வந்து ஆவியாகி வெளியேறும் போது, தோலுக்கு கீழே இருக்கும் அடித்தோலும், அதோடு சேர்ந்திருக்கும் ரத்தக்குழாயும், ரத்தமும் குளிர்ந்துபோய்விடும். இப்படித்தான் உடலின் வெப்ப நிலை எப்பொழுதும் சீராக வைத்துக் கொள்ளப்படுகிறது. வெப்ப நிலையை மனித உடல் சீராக வைத்துக்கொள்ளும் இந்த முறைக்கு 'வெப்ப நிலை சீரமைத்தல்" என்று பெயர்.

சிலருக்கு வெயில் காலம் வந்தாலே, வியர்க்குரு அள்ளிக் கொட்டினாற்போல் உடம்பெல்லாம் வந்துவிடும். உடலிலுள்ள தோலின் மேற்புறத்தில் சிறுசிறு கொப்புளங்களாகத் தோன்றி, சொரிந்தால் எரிச்சலையும் , வலியையும் , அரிப்பையும் கொடுக்கக்கூடிய நிலையில் இருக்கும்.

தட்பவெப்ப சீதோஷ்ண நிலை, வெயிலில் அதிக நேரம் இருப்பது, அதிக வியர்வை வரும் வேலைகளைச் செய்வது, இறுக்கமான ஆடைகளை அணிவது, புழுக்கமான, காற்றோட்டம் அதிகம் இல்லாத இடத்தில் அதிக நேரம் இருப்பது போன்றவை வியர்க்குருவை உண்டாக்கும் சில காரணங்களாகும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாடாய்ப்படுத்தும் இந்த வியர்க்குரு, கோடைகாலத்தில் அநேகம் பேருக்கு ஏற்படும் பிரச்சினை ஆகும்.

உடலில் வந்த வியர்க்குரு நிறைய பேருக்கு எந்தவித சிகிச்சையுமின்றி தானாகவே மறைந்துவிடும். சில பேருக்கு எரிச்சலையும் அசவுகரியத்தையும் கோபத்தையும் உண்டுபண்ணிவிட்டுத்தான் போகும். 'கொட்டும் புதுமழையில் கொஞ்ச நேரம், சொட்டச் சொட்ட நனைந்தாலே, உடலிலுள்ள வியர்க்குரு முழுவதும் கொட்டிவிடும்" என்பார்கள் கிராமத்துப் பெரியவர்கள்.

வெயில் காலத்திற்கும், வியர்க்குரு காலத்துக்கும் மிகச்சிறந்தவை பழங்களை அதிகமாக உண்பதே.

1). இளநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய், கிர்ணிப்பழம் போன்றவை வியர்க்குருவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் உதவும்.

2). கிராமத்தில் அதிகம் கிடைக்கக்கூடிய பனை நுங்கு மிகமிகச் சிறந்த மருந்து. அதிக அளவில் இதை சாப்பிடலாம்.

3). வேப்பிலை, சந்தனம், மஞ்சள் இந்த மூன்றுமே வியர்க்குருவுக்கு மிகச் சிறந்த கிருமி நாசினி மருந்து. இந்த மூன்றையும் சம அளவில் எடுத்து, மையாக அரைத்து, வியர்க்குரு இருக்கும் இடங்கள் முழுவதிலும் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை தேய்த்து, சுமார் 1 மணி நேரம் ஊற விட்டு, பின் குளிக்கவும்.

4). வெறும் சந்தனத்தைக்கூட இம்மாதிரி உடலெங்கும் தேய்த்துக் கொள்ளலாம்.

5). வெயில் காலத்தில், வழக்கமாக குடிப்பதைவிட, சற்று அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

6). முடிந்தவரை வெயில் கடுமையாக இருக்கும் நேரங்களில் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

7). பருத்தியால் செய்யப்பட்ட ஆடைகளை வெயில் காலத்தில் உடுத்தவும்.

8). கற்றாழைச் சாறு தடவினால் நல்ல பலன் கிடைக்கும்

9). ஐஸ் கட்டிகளை ஒரு துணியில் கட்டி வைத்துக் கொண்டு, வியர்க்குரு இருக்கும் இடங்களின் மேல் தடவினால், எரிச்சல், அரிப்பு குறைந்துவிடும்.

10). காற்றோட்டமான இடத்தில் இருக்கப் பழகுங்கள்.

Read Entire Article