*ஆணைகளை கலெக்டர் வழங்கினார்
தர்மபுரி : தர்மபுரி அருகே வெடி விபத்தில் உயிரிழந்த 3 பெண் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு, இலவசக்கல்வி பெறுவதற்கான ஆணைகளை தர்மபுரி கலெக்டர் சதீஷ் வழங்கினார்.
தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் சதீஷ் தலைமையில் நேற்று நடந்தது.
பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பஸ் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா வேண்டுதல், சிட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 467 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி, அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
கூட்டத்தில், கம்பைநல்லூர் பகுதியில் பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் உயிரிழந்த 3 பெண் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு, பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் இலவச கல்வி பெறுவதற்கான ஆணைகளையும், படிப்பதற்கு தேவையான பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள், கற்றல் உபகரணங்கள் மற்றும் உடைகளை கலெக்டர் வழங்கினார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜோதிசந்திரா, தனித்துணை கலெக்டர் சுப்ரமணி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post வெடி விபத்தில் உயிரிழந்த 3 பெண் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு இலவச கல்வி appeared first on Dinakaran.