
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரம் தனது 62-வது படமான 'வீர தீர சூரன் 2' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை சித்தா பட இயக்குனர் எஸ்.யு.அருண்குமார் இயக்கியுள்ளார். எச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷரா விஜயன், சித்திக் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் நடிகர் விக்ரம் கிராமிய தோற்றத்தில் 'காளி' என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். பொதுவாகவே சினிமாவில் எந்த ஒரு படமும் முதல் பாகம் வெளியான பின்னர்தான் இரண்டாம் பாகம் வெளியாகும். ஆனால் இயக்குனர் அருண்குமாரை பொறுத்தவரை அவர் முதலில் 2-ம் பாகத்தை இயக்கி வெளியிடுகிறார். அருண்குமாரின் இந்த வித்தியாசமான முயற்சி பாராட்டுக்குரியது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
இப்படம் வருகிற 27-ந் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், பிரபல தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸின் உரிமையாளர் அருண் விஷ்வா 'வீர தீர சூரன் 2' படத்திற்கான முதல் விமர்சனத்தை கொடுத்துள்ளார். இது குறித்த அவர் தனது எக்ஸ் தளத்தில், "எஸ்.யு. அருண்குமார் என்ற பெயரை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இது விளம்பரத்திற்காக போடப்பட்ட ட்வீட் அல்ல" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.