
தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் நானி. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் உடையவர். இவரது நடிப்பில் வெளிவந்த 'ஷியாம் சிங்கா ராய்', 'அடடே சுந்தரா' திரைப்படங்கள் அமோக வெற்றியைப் பெற்றன. அதன் பின்னர் வெளியான 'தசரா' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
அதனை தொடர்ந்து நானியின் 30வது படமாக 'ஹாய் நான்னா' படம் கடந்தாண்டு வெளியானது. இதில் நானியுடன் மிருணாள் தாக்குர் நடித்திருந்தார். 31வது படமாக அடடே சுந்தரா படத்தின் இயக்குநருடன் நானி இணைந்தார். டிவிவி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் 'சரிபோத சனிவாரம்' (சூர்யாவின் சனிக்கிழமை) எனப் பெயரிடப்பட்டுள்ள படம் கடந்த ஆண்டு வெளியானது. இப்படத்தில் இவருடன் எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 'சூர்யாவின் சனிக்கிழமை' ரூ.100 கோடி வசூலித்தது. இயக்குநர் சைலேஷ் கொலனு இயக்கத்தில் 'ஹிட் 3' படம் பாக்ஸ் ஆபீஸில் வசூலை குவித்தது.
சமீபத்தில் நானியின் 33-வது படத்தின் அறிவிப்பு வெளியானது. தசரா படத்தை இயக்கிய ஸ்ரீகாந்த் ஒடேலா நானியின் 33-வது படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்குத் தற்காலிகமாக 'நானிஒடேலா - 2' எனப் பெயரிடப்பட்டிருந்தது. இந்தப் படத்திற்கு 'தி பாரடைஸ்' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தப் படத்தினை எஸ்எல்வி சினிமாஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ஏற்கனவே நானியின் ஜெர்ஸி, கேங்ஸ்டர் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.நானியின் படங்களிலேயே அதிக பொருட்செலவில் இந்தப்படம் உருவாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஓ.டி.டி மற்றும் தொலைக்காட்சி உரிமைகளும் விற்கப்பட்டுவிட்டன.

சமீபத்திய தகவலின்படி இந்த படத்தில் 2 கதாநாயகிகள் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதில் ஒரு கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டியும் மற்றொரு கதாநாயகியாக கயாடு லோஹரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அண்மையில் 'தி பாரடைஸ்' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது. இப்படத்தின் தீம் பாடல் சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில் 'தி பாரடைஸ்' படப்பிடிப்பில் நானி இணைந்துள்ளார். படத்தின் கிளிம்ஸ் வீடியோவும் அதில் இடம்பெற்ற அனிருத்தின் பின்னணி இசையும் இந்தியளவில் கவனிக்கப்பட்ட நிலையில், இப்படப்பிடிப்பில் நானி இணைந்துள்ளதை படக்குழு அறிவித்துள்ளது. .அடுத்த 40 நாள்கள் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற உள்ளதையும் குறிப்பிட்டுள்ளனர். ஐதராபாத்தில் நடைபெறும் இந்த படப்பிடிப்பில் முன்னணி நடிகர்களும் கலந்து கொள்கிறார்கள். இதற்காக பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.