வீட்டுக்குள் நுழைய முயன்ற காட்டுயானை - விவசாயிகள் அச்சம்

7 hours ago 2

கோவை,

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையிலும், ஒரு சில காட்டுயானைகள் மாலை மற்றும் இரவு நேரங்களில் வனப் பகுதியில் இருந்து வெளியேறி, அருகில் உள்ள கிராமங்களில் புகுந்து அங்கு உள்ள விளை நிலங்களை சேதப்படுத்தி வருகிறது. இதனிடையே, கோவை அருகே உள்ள நரசீபுரம் பகுதியில் கடந்த சில தினங்களாக ஒற்றை யானை சுற்றி வருகிறது. இரவு நேரத்தில், குடியிருப்பு பகுதிகளை குறி வைத்து அங்கு செல்லும் யானை வீட்டில் வைக்கப்பட்டு இருக்கும் ரேஷன் அரிசி மற்றும் மாடுகளுக்கு வைக்கப்பட்டு இருக்கும் தீவனங்களை சாப்பிட்டு வருகிறது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை நரசீபுரம் அடுத்த வைதேகி நீர்வீழ்ச்சிக்கு செல்லக் கூடிய பகுதியில் உள்ள விவசாயி பாலு என்பவரது வீட்டின் காம்பவுண்ட் கேட்டை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றது. பின்னர், அந்த ஒற்றை யானை வீட்டின் முன்பு சாக்குப் பையில் வைத்திருந்த தவிடு மற்றும் நிலக்கடலை கொடியை சாப்பிட்டது. மேலும், வீட்டின் வாசலில் யானை நிற்பதை பார்த்த பாலுவின் உறவினர்கள் அச்சமடைந்தனர்.இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்த நிலையில், வனத்துறையினர் அங்கு வந்துகொண்டிருந்தனர். அவர்கள் வந்த ஜீப் பழுதானது. உடனே அங்குள்ள பொதுமக்கள் தங்களுடைய வாகனத்தில், வனத்துறையினரை அழைத்துச் சென்று யானையை விரட்டினர்.

இதுகுறித்து, அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, இரவு நேரங்களில் வனத்தில் இருந்து வெளியேறும் யானைகள், விவசாய நிலங்களில் புகுந்து சேதப்படுத்தி வந்தது. தற்போது, வீடுகளை குறி வைத்து வருகிறது. குறிப்பாக, ரேஷன் அரிசி மற்றும் மாடுகளுக்கு வைக்கப்படும் புண்ணாக்கு, தவிடுகளை சாப்பிடுவதற்காக வீட்டின் கதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளே செல்வதால், வீட்டுக்குள் குடியிருக்கவே அச்சமாக உள்ளது.எனவே, வீடுகளை நோக்கி வரும் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

Read Entire Article